உள்ளங்கையில் உடல் நலம் - பி.எம்.ஹெக்டே; தமிழில்: நிழல் வண்ணன்; பக்.176; ரூ.166; வானவில் புத்தகாலயம், சென்னை-17; )044 - 2986 0070.
"நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும் நாம் சிறந்த வாழ்க்கைமுறையைக் கொண்டால் நோயிலிருந்து விரைந்து குணமடைய முடியும்' என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் நாம் கொண்டுள்ள பல கருத்துகளை இந்நூல் மாற்றியமைத்துவிடுகிறது.
நன்றாகத் தூங்கினால், உடல் நலம் பெறும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, "ஒரு நாளைக்கு 9 இலிருந்து 10 மணி நேரம் வரை தூங்கினால் தசையின் புரதச் சத்து இழப்பை அதிகரிக்க வைக்கும்; அதிகத் தூக்கம் ஆயுட்காலத்தைக் குறைக்கும்' என்கிறது நூல்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கோதுமைதான் சிறந்த உணவு என்பது நம்பிக்கை. ப்ரோலாமின் என்கிற நல்ல கொழுப்பு கோதுமையை விட அரிசியில் அதிகம் இருக்கிறது.
நார்ச்சத்து கோதுமையில் உள்ளதை விட அரிசியில் அதிகம். எனவே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அரிசிதான் சிறந்த உணவு என்கிறார் நூலாசிரியர்.
தற்போதைய மருத்துவத்தில் உள்ள குறைபாடுகளையும் நூல் சுட்டிக் காட்டுகிறது. நோய் உட்பட மனிதர்களின் துயரம் அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது தற்போதைய நிதி பொருளாதார நிலைமையும் அது ஏற்படுத்தியுள்ள போட்டி மனப்பான்மையும்தான் என்கிறார் நூலாசிரியர்.