பிரஞ்சியர் காலப் புதுச்சேரி நகரமும் அதன் தெருக்களும்-நா.இராசசெல்வம்; பக்.204; ரூ.150; செம்பியன் சேரன் பதிப்பகம், புதுச்சேரி-605008.
பிரெஞ்சு காலத்தில் எவ்வாறு நேர்த்தியான தெருக்கள், நகர அமைப்புகளுடன் அழகிய புதுச்சேரி நகரம் உருவாக்கப்பட்டது என்பதை அக்காலகட்ட வரைபடங்களுடன் துல்லியமாக விளக்கும் நூல் இது.
புதுச்சேரி நகரத்தைக் கண்டறிந்த போர்த்துகீசியர்கள், வளர்த்தெடுத்த பிரெஞ்சுக்காரர்கள், வர்த்தக நகராக தங்களது ஆளுகைக்குள் வைத்திருந்த டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள் பற்றிய முழுவிவரங்களுடன் புதுச்சேரி நகரம் மற்றும் தெருக்களின் வரலாற்றைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் காலப்பெட்டகமாக விளங்குகிறது இந்நூல்.
பிரெஞ்சு காலத்தில் புதுச்சேரி நகரில் இருந்த ஐரோப்பியர்கள் வாழ்ந்த வெள்ளை நகரம், இந்தியர்கள் வாழ்ந்த கருப்பர் நகரம், அவற்றின் தெருக்கள் குறுக்கும், நெடுக்குமாக நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டது, ஒவ்வொரு வீதிகளிலும் யார் யார் குடியமர்த்தப்பட்டனர் என்பன போன்ற தகவல்கள் அக்கால புதுச்சேரி வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
பிரெஞ்சு கால தெருக்களின் புகைப்படங்கள், லூயி கோட்டை, புதுச்சேரி ஆற்று முகத்துவாரம், நகர விரிவாக்கம் தொடர்பான வரைபடங்கள் புதுச்சேரியின் வரலாற்று பொக்கிஷங்களாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதுவரை வேறு எந்த நூலிலும் இல்லாத
அளவுக்கு புதுச்சேரி நகரம் மற்றும் அந்நகரின் ஒவ்வொரு தெருக்களின் வரலாற்றுப் பெருமைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து எழுதியிருப்பது மிகவும் சிறப்பு.