ஆத்மபோதம் - க. மணி; பக்.260; ரூ.350; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி. நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை - 641 015.
"நான்' என்னும் சொல்லை நாம் எல்லாருமே ஒவ்வொரு நாளும் பலமுறை உச்சரிக்கிறோம். ஆனால், அந்த நான் என்பது என்ன? அது நம் உடலா? உறுப்பா? மனமா? இவை மூன்றுமே இல்லையென்றால் வேறு எது? நான் என்பதற்கும் நான் அல்லாதவற்றிற்கும் என்ன வேறுபாடு? அந்த வேறுபாட்டை நாம் எப்படி அறிவது? அதனை அறிவதால் நாம் பெறக் கூடிய பயன் என்ன? இந்த வினாக்கள் அனைத்திற்கும் விடையாக அமைந்திருக்கிறது இந்த நூல்.
கனமான விஷயம் குறித்த நூலாக இருந்தாலும், இதன் பெரும்பகுதி வினா-விடை முறையில் அமைந்திருப்பதால் வாசிப்பதில் அயற்சியோ நெருடலோ ஏற்படவில்லை. பல சுருதி உள்பட அறுபத்தெட்டு அத்தியாயமாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. "பகவத் கீதை' போல ஒவ்வோர்அத்தியாயத்திலும் வடமொழியில் ஒரு சுலோகமும் தமிழில் அதற்கான பதவுரையும் விளக்கவுரையும் கொடுக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள வடமொழி சுலோகங்கள், "ராமாயணம்', "மகாபாரதம்' போன்ற காவியங்கள் எழுதப்பட்ட சந்தஸôன அனுஷ்டுப் சந்தஸில் இயற்றப்பட்டுள்ளன.
மோட்சத்திற்கு பக்தி, ஞானம், யோகம், கர்மம் என்று நான்கு வழிகள் உள்ளன என்று பொதுவாகக் கூறப்படுவதை இந்நூலாசிரியர் மறுக்கிறார். அறிவு ஒன்றே முக்தி தரும். அவ்வகையில் ஞான மார்க்கம் மட்டுமே ஏற்புடையது என்று கூறுகிறார். இறைவன் சைதன்ய வடிவில் இருப்பவர் என்பதை நிறுவியிருப்பதும், தியானம் செய்வதன் இன்றியமையாமையை விளக்கியிருப்பதும் ஆசிரியரின் ஆழ்ந்த புலமையைக் காட்டுகின்றன.
பிரம்மம் ஒன்று மட்டுமே சத்தியம். மற்ற அனைத்துமே தோற்றத்தை மாத்திரமே கொண்டிருக்கும் மித்தியாத் தன்மை கொண்டவையே என்பதே இந்நூலின் மையக்கருத்து.