விவேகானந்தம்
By DIN | Published On : 26th July 2021 01:40 PM | Last Updated : 26th July 2021 01:40 PM | அ+அ அ- |

விவேகானந்தம் - எஸ்.சுஜாதன் - தமிழில்: ப.விமலா; பக். 320; ரூ. 350; காவ்யா, சென்னை-24; )044-2372 6882.
மலையாளத்தில் எழுதப்பட்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பே "விவேகானந்தம்'.
இந்து மதத்தின் சாராம்சங்களை இந்தியாவுக்குள் மட்டுமன்றி மேற்கத்திய நாடுகளிலும் சுவாமி விவேகானந்தர் பரப்புரை செய்தார். இந்தியா, வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சுமார் ஆறு வருடப் பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை இந்த நாவல் பதிவு செய்துள்ளது.
தீவிர இந்து மதப் பற்றாளரான சுவாமி விவேகானந்தர் பிற மதங்களிலுள்ள நல்ல பல கருத்துகளை தயங்காமல் ஏற்றுக்கொண்டார். சனாதன தர்மத்தை அவர் வலியுறுத்தியபோதும் அதிலுள்ள சாதியப் பாகுபாட்டை தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து விமர்சித்தும் எதிர்த்தும் வந்துள்ளார்.
அமெரிக்காவில் பல்சமய மாநாட்டில் கலந்துகொண்டு பல்வேறு மதத்தினரிடையே இந்து மதம் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை முன்னேற்ற முடியும் என சுவாமி உறுதியாக நம்பினார்.
மதம், மொழி, இனம், தேச எல்லைகளைக் கடந்து சுவாமி விவேகானந்தர் அனைவராலும் அறியப்பட்டவர் என்றாலும் பரவலாக அறியப்படாத அவரது பயணங்கள், ஆன்மிக சிந்தனைகள், பகுத்தறிவு, அத்வைதக் கோட்பாடுகள், உபதேசங்கள், ஆத்ம பலம் குறித்து நாவல் வடிவில் வெளிவந்துள்ள இந்நூல் எடுத்தியம்புகிறது.