பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் - ஈரோடு தமிழன்பன்; பக்.196; ரூ.160; விழிகள் பதிப்பகம், 8/ எம், 139, ஏழாவது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-600 041.
கவிஞர் ஈரோடு தமிழன்பன்பாவேந்தர் பாரதிதாசன் மீது பெரும் பற்று கொண்டிருந்தவர் மட்டுமல்ல; அவருடன் பத்து ஆண்டுகள் நெருங்கிப் பழகியவரும் ஆவார்.
தஞ்சையிலுள்ள கரந்தை புலவர் கல்லூரியில் தமிழன்பன் மாணவராக இருந்தபோது, அவருக்கு அறிமுகம் ஆகிறார் பாரதிதாசன். கல்லூரி விழாவுக்கு வந்திருந்த பாரதிதாசனைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தமிழன்பனுக்குக் கிடைத்ததால் பாரதிதாசனோடு நெருங்கிப் பழக முடிந்தது.
படிப்பு முடிந்து பணியில் சேர்ந்த பின் மீண்டும் பாரதிதாசனை சந்திக்கிறார். அது முதல் பாரதிதாசனின் இறுதிக்காலம் வரை அவருடன் பயணிக்கிறார். (பாரதிதாசன் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் தமிழன்பனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்).
பாரதியாருக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி? பாரதி தமிழ்நாட்டை "தந்தையர் நாடு' என்று கூற காரணம் என்ன? பாரதிதாசனுக்கு ஞானபீட விருது கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரோடு கருத்து மாறுபாடு கொண்டவர்கள்கூட மிகவும் முயன்றது. பாரதிதாசனோடு முரண்பட்ட தெ.பொ.மீ., கி.வா.ஜ., டி.கே.சி., சாண்டில்யன் போன்ற பலரும் அவருடைய கவிதைகளை எல்லா மேடைகளிலும் போற்றிப் புகழ்ந்தது, பாரதியார் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க பாரதிதாசன் முயன்றது, தமிழன்பனின் எழுத்துகள் நூல் வடிவம் பெற பாரதிதாசன் பெரிதும் முயன்றது - இப்படி ஏராளமான செய்திகள் இந்நூலில் இருக்கின்றன.
புலால் உண்ண வேண்டியதன் அவசியத்தையும், ஆசிரியர்கள் முறையாகத் தமிழ் பயில வேண்டிய அவசியத்தையும் பாரதிதாசன் நகைச்சுவையோடு கூறியிருப்பது ரசிக்கத்தக்கது.
பாரதிதாசனின் அறியப்படாத பக்கங்களை அறிய இந்நூல் உதவும்.