என்னை நானே பார்த்தேன் (ஆன்மிக வாழ்வியல் அனுபவங்கள்) -அனு.வெண்ணிலா; பக்.264; ரூ. 250; திருப்பூர் குமரன் பதிப்பகம், 57-பி, பத்மாவதி நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை- 600 092.
மானுட வாழ்க்கையைப் பக்குவப்படுத்த நம் முன்னோர் உருவாக்கிய வழிமுறைகளில் ஆன்மிகம் பிரதானமானது. பரம்பொருளின் ஓர் அங்கமே தான் என்று உணரும் மானுடன், பிறரும் இறைவனின் அங்கமே என்று உணர்கிறான். இவ்வாறு தன்னை அறிவதே ஆன்மிகத்தின் சிகர நிலை. ஆனால் இந்த நிலை அனைவருக்கும் வாய்ப்பதில்லை. எனவே தான் இந்தச் சிந்தனையை மக்களிடையே விதைக்க சித்தர்களும், ஞானிகளும், யோகிகளும், மகான்களும் அவ்வப்போது அவதரிக்கின்றனர்.
அன்றாட வாழ்வின் பிடிலிருந்து விலகி, உன்மத்த நிலையில் இறைவனுடன் இணைந்த சித்தர்களை அடையாளம் காணவும் இறையருள் தேவைப்படுகிறது.
தனக்கென எதுவும் இல்லாத, உடைமைப் பற்றில்லாத, தன்னைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாத இந்த மகான்களின் முன்பு, சுயநலமே உருவான மக்களின் அகந்தை மண்டியிடுகிறது.
யோகி ராம்சுரத்குமார், சேஷாத்ரி சுவாமிகள், பூண்டி மகான், மயிலை குருஜி சுந்தரராமன் சுவாமிகள், மாயம்மா, பாணிபாத்திர சுவாமிகள் உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட ஆன்மிக சாதகர்களுடனான தனது அனுபவத்தை இந்நூலில் இனிய தமிழ் நடையில் நூலாசிரியர் தொகுத்திருக்கிறார் .
ஆன்மிகப் பேருணர்வின் உச்சமாகவும், பக்தி நிலையின் எச்சமாகவும் பல நிகழ்வுகள் காட்சி தருகின்றன. மாத இதழ் ஒன்றில் தொடராக வந்த இந்த அனுபவக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, அழகிய நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இறை நெறியாளர்கள் படிக்க வேண்டிய நூல் இது.