மருதநாயகம் என்ற மர்ம நாயகம் - அமுதன்;பக்.336; ரூ.300; மணிமேகலைப் பிரசுரம், சென்னை -17; )044-2434 2926.
மருத நாயகத்தின் 39 வருட வாழ்க்கையை பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் தேதி வாரியாக விரிவாக அலசுகிறது இந்நூல்.
மருதநாயகம் இந்துவா, இஸ்லாமியரா அல்லது இந்துவாகப் பிறந்து இஸ்லாத்துக்கு மாறினாரா என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அதுபோன்றேஅவர் ஆங்கிலேயர்களை தமிழக மண்ணில் வேரூன்ற வழிவகை செய்தாரா அல்லது
விடுதலை வீரரா என்பதை வாசகர்களின் முடிவுக்கு நூலாசிரியர் விட்டுவிடுகிறார்.
17-ஆம் நூற்றாண்டில் முகலாயர், ஜமீன்தார், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள் என நான்கு முக்கிய ஆட்சி அதிகாரத்தின்கீழ் தமிழகம் போட்டி, பொறாமை, போர், துரோகம், வஞ்சம் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது. இவற்றுக்கு மத்தியில் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து தனியொருவராக கிளம்பிய மருதநாயகம் தன்னுடைய அளப்பறிய வீரம், நேர்மை குணங்களால் பரவலாக அறியப்பட்டார். விளைவாக, ஆங்கிலேயர்களின் ஆளுமைக்கு உள்பட்டிருந்த மதுரை, திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளின் கமாண்டராக அவர் நியமிக்கப்படுகிறார்.
ஆனால் ஒருகட்டத்தில் ஆங்கிலேயர்கள் மருத நாயகத்துக்கு எதிராகத் திரும்பினர். கடைசி நிமிடம் வரை ஆங்கிலேயர்களிடம் சரணடையாமல் தீரத்துடன் எதிர்த்து நின்ற அவரை ஆங்கிலேயர்கள் வஞ்சத்தாலும், சூழ்ச்சியாலும் வென்றனர்.மருத நாயகத்தை தூக்கிலிட்டு கொன்றனர்.
அவர் தொடர்பான முக்கியத் தகவல்களை வரலாற்று ஆவணங்களிலிருந்தும் ஆங்கிலேயர்கள் நீக்கினர் என்பதை ஆதாரங்களுடன் இந்நூல் விவரிக்கிறது.
அன்றைய தமிழகத்தின் போர் முறைகள், படை வீரர்கள், தமிழகத்தின் செல்வச் செழிப்பு, ஆங்கில, பிரெஞ்ச் ஆட்சியாளர்களின் பணத்தாசை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. சிறந்த வரலாற்று ஆவணம்.