இதுவும் கடந்து போகும் - துரை ஆனந்த் குமார்; பக்.80; ரூ.100; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை - 78. )044- 48557525
வளரிளம் பருவம் எனப்படும் டீன் ஏஜில் ஆண், பெண் குழந்தைகளிடம் உடல், மன ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என அலைபாயும் பருவ வயதை பக்குவத்துடன் எவ்வாறு கடந்து செல்வது என்பதை ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் பதிவு செய்துள்ளது.
ஒருவரின் எதிர்காலம், குணாதிசயம், மன உறுதி, உடல்நலம் உள்ளிட்ட அடிப்படைக்கூறுகளை நிர்ணயிப்பதில், 11 வயது முதல் 19 வயது வரையிலான 9 வருடங்கள் மிக முக்கியமானவையாகும்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் வளரிளம் பருவத்தின் முதல் 9 வருடங்களில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும், அவற்றை எவ்வாறு சரி செய்து கடந்து வர வேண்டும் என்பதை 9 அத்தியாயங்களில் சின்னச்சின்ன கதைகளாக இந்நூல் விவரிக்கிறது.
நல்ல அறிவுரைகளைப் புறக்கணித்தல், எதையும்அலட்சியப்படுத்தி எதிர்க்கத் துணிதல், தான்தோன்றித்தனமாகச் செயல்படுதல், கட்டுப்பாடற்ற சுதந்திர மனப்பான்மை, உணர்ச்சிக் கொந்தளிப்புகள், உடலியக்க மாற்றங்கள், சுற்றுப்புறத்தின் தாக்கம் என பல்வேறு சவால்களைச் சந்திக்கும் வளரிளம் பருவத்தினரிடம் பெற்றோர் நட்புடன் பழக வேண்டியது மிக அவசியம்.
அதேநேரத்தில் பதின் பருவத்தினரும் மூத்தோர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.
ஒவ்வோர் அத்தியாயத்தையும் சுவாரஸ்யமான கதையாகப் புனைந்து அதனுள் பதின்பருவத்தினருக்கு தேவையான அறிவுரைகளைப் பொதிந்து தந்திருப்பது இந்நூலின் சிறப்பு.