மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு - தொகுப்பாசிரியர்: எம்.எஸ்.செல்வராஜ் ; பக்.96; ரூ.100; பாரதி புத்தகாலயம், சென்னை-18; )044- 2433 2924.
1815- ஆம் ஆண்டு இலங்கையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அங்கு அவர்கள் கட்டுமானப் பணிகளைச் செய்ய தமிழகத்திலிருந்து பலரை அழைத்துச் சென்றனர். பிரிட்டிஷ் முதலாளிகள் காப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்களை இலங்கையில் ஏற்படுத்தி, அவற்றில் வேலை செய்யவும் தமிழ்நாட்டிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் இருந்து சென்றவர்களால், இலங்கையின் பொருளாதாரம்
மேம்பட்டது என்றாலும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இந்நிலையை மாற்ற தஞ்சாவூரைச் சேர்ந்த கோ.நடேசய்யர் இலங்கைக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராகி, தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் முழங்கினார். 1919 - இல் சிங்கள உழைப்பாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் உருவாகி, தோட்டத் தொழிலாளர்களுடன் அவர்கள் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டனர். சிங்கள - தமிழின உழைப்பாளி மக்களின் ஒற்றுமை உருவாகியது.
1930 - ஆம் ஆண்டு நேருவின் முன்முயற்சியில் இலங்கை இந்திய காங்கிரஸ் உதயமானது. இதன் விளைவாக தோட்டத் தொழிலாளர்கள் இந்தியர்களாகவே கருதப்பட்டனர்.
உழைக்கும் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கில் இனவெறி அரசியல் சிங்கள அரசியல்வாதிகளால் முன் வைக்கப்பட்டது. இன அரசியலை தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் முன்னெடுத்தனர்.
இந்நிலையில் சாஸ்திரி - ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தம், இந்திராகாந்தி - ஸ்ரீமாவோ ஒப்பந்தங்கள் இலங்கையில் குடியுரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வழி செய்தது.
தமிழகத்துக்கு திரும்பிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் பெரிய அளவு முன்னேற்றமோ, மாற்றங்களோ ஏற்படாமல், இன்று வரை துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய மேம்பாட்டுக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய குறிப்பிடத்தக்க ஆவணம் இந்நூல்.