பயம் - ஹிப்னோ ராஜராஜன்; பக்.312; ரூ.350; ராரா புக்ஸ், பாடி கேட் கிளினிக், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு எதிரில், அம்மாபாளையம், திருப்பூர்- 641652.
மனித வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களால் பயம் ஏற்படுகிறது. ஆழ்மனம் பாதிக்கப்பட்டால் பயம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால், அது மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கிறது.
பயமும் பலவிதங்களில் ஏற்படுகிறது. நிறங்களைப் பார்க்கும்போது பயம்
ஏற்படுகிறது. நாயைப் பார்க்கும்போது, கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போது சிலருக்குப் பயம் ஏற்படுகிறது. இடி இடித்தால் பயம், ரத்தத்தைப் பார்த்தால் பயம், சாலையின் குறுக்கே கடந்து செல்ல பயம், மாடியிலிருந்து கீழே பார்த்தால் பயம் என்று பலவித பயங்கள் ஏற்படுகின்றன.
அதேபோன்று குழந்தைகளுக்கு ஏற்படும் பயம், பெரியவர்களுக்கு ஏற்படும் பயம், பெண்களுக்கு ஏற்படும் பயம், ஆண்களுக்கு ஏற்படும் பயம் என பயம் பல்வேறு தன்மைகளில் வெளிப்படுகிறது.
பயம் உள்பட பல்வேறு மனநோய்களைத் தீர்க்க தரப்படும் மாத்திரைகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மனநலம் மேலும் பாதிக்கப்படுகிறது. பயத்தைப் போக்க சரியான மருந்து மாத்திரைகளே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பயத்தைப் போக்க ஆழ்மனதைச் சரி செய்ய வேண்டும். அதற்கு ஹிப்போ ஆழ்மன சிகிச்சை செய்ய வேண்டும். அதாவது ஆழ்மனதில் இருந்து பயத்தை அழித்துத் தூய்மைப்படுத்த வேண்டும். பயம் மனதை விட்டு விலகிச் சென்றால்தான் மனநோயிலிருந்து மனிதன் விடுதலை பெற முடியும்.
இவ்வாறு மனதில் தோன்றும் பயம் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும் இந்நூல் மிக விரிவாகப் பேசுகிறது. நூலாசிரியர் ஹிப்னோ மைண்ட் சர்ஜன் என்பதால், தன்னிடம் மனநோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று நலமடைந்து சென்ற மனநோயாளிகள் குறித்தும், அவர்களுக்குச் சிகிச்சைஅளிக்கும்போது நூலாசிரியருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளமுடிகிறது. ஆழ்மனதைச் சீர் செய்வதே மனநோய்களுக்கான சிறந்த சிகிச்சை என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.