நேமிநாதம் காலத்தின் பிரதி - நா.அருள்முருகன்; பக்.232; ரூ.230; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044-2489 6979.
தொல்காப்பியத்திற்குப் பிறகு இலக்கண நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சமணரான குணவீர பண்டிதரால் எழுதப்பட்ட நேமிநாதம்.
"நேமிநாதம் குறித்து ஓரிரு நூல்கள் வந்திருந்தாலும் அவை உள்ளடக்கம், ஒப்பீடு அளவிலேயே நின்றுவிட்டன. நேமிநாதத்தைத் தனியொரு பனுவலாகக் கொண்டு அதன் கொடுக்கல் வாங்கல் பற்றி முழுமையான சிந்தனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை' என்ற நூலாசிரியரின் மனக்குறை, இந்த ஆய்வின் மூலம் ஓரளவு தீர்ந்திருக்கிறது.
நேமிநாதத்தின் இலக்கண வெளிப்பாடு, நேமிநாதத்துக்கும் வீரசோழியத்துக்கும் இடையேயான வேறுபாடுகள், நேமிநாதம் பின்பற்றியுள்ள இலக்கணக் கொள்கைகள் மற்றும் உரை வேறுபாடு, நேமிநாதத்தின் இலக்கண உருவாக்கத்தில், அதன் பயிற்சியில் காலமும் சமூகமும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் ஆகியவற்றை தக்கச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது.
நேமிநாதத்தின் காலம் பற்றி அறிஞர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைப் பதிவு செய்வதுடன், நேமிநாதம் தோன்றியதற்கான காரணங்கள், சமுதாயம், பா வடிவம், சிந்தனை மரபு, நேமிநாதமும் வீரசோழியமும் வெளிப்படுத்தும் இலக்கண முறைகளுக்குள்ள வேறுபாடுகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தொல்காப்பியம், நன்னூல் போல நேமிநாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் இலக்கண நூல் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.