பழவேற்காடு வரலாறு - பழவை வீ.ராதாகிருஷ்ணன்; பக்.320; ரூ.250; வைகரி பால்டேனியல் பதிப்பகம், 28, பஜனைக் கோயில் தெரு, டாக்டர் அம்பேத்கர் நகர், பழவேற்காடு- 601 205.
"பழவேற்காடு' தொடர்பாக இதுவரை யாருமே சொல்லாத வரலாற்று உண்மைகளைப் பல்வேறு சான்றுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். பழவேற்காடு ஒரு மீன்பிடித் துறைமுகம், கடற்பகுதி, ஏரி என்று மட்டும் நினைப்பவரின் எண்ணத்தைப் புரட்டிப் போட்டுவிடுகிறது இந்நூல்.
இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்பே புதுப்பொலிவு பெற்றன. தலைசிறந்த துறைமுகப்பட்டினங்களும் உருவாயின. அவற்றுள் பழவேற்காடும் ஒன்று. கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "எரிதேரியன் கடற்பயணக் குறிப்புகள்' என்ற நூலில்தான் பழவேற்காடு ஏரியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
தமிழகத்தின் வடக்கு எல்லையில் உள்ள அதாவது, சென்னை கோட்டையிலிருந்து வடக்கே பக்கிங்காம் கால்வாய் வழித்தடத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீரை அதிகம் கொண்ட ஏரியைக் கொண்டது பழவேற்காடு.
மீன்பிடி தொழிலுக்குப் பெயர் பெற்றது என்று மட்டும் பலரும் நினைக்கும் இவ்வூர், பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்டிருக்கிறது. முன்பு நெசவுத் தொழிலே இவ்வூரில் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. இங்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கிய ஏற்றுமதிப் பொருள் வைரம்.
பழவேற்காடு ஒரு சுற்றுலாத் தலமும்கூட என்பது கூடுதல் தகவல்.
ஐரோப்பியர், அரபு வம்சாவளியினர் வருகை, டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி, டச்சுக்காரர்களின் கோட்டை, டச்சுக் கல்லறை, கலங்கரை விளக்கம், படகு சவாரி, நிழற் கடிகாரம், ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி, பக்கிங்காம் கால்வாய், பழவேற்காடு ஏரி, அங்கு கரையோரத்தில் அமைந்த கிராமங்கள், ஆயிரக்கணக்கில் காணப்படும் பறவைகள், ஸ்ரீஹரிகோட்டா தீவு உள்பட பழவேற்காடு தொடர்பான சிறப்புமிக்க வரலாற்று உண்மைகளைப் படிக்கப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது.