பெத்த மனம் (சிறுகதைகள்)
By DIN | Published On : 01st August 2022 12:55 PM | Last Updated : 01st August 2022 12:55 PM | அ+அ அ- |

பெத்த மனம் (சிறுகதைகள்) - சுப்பிரமணிய பாண்டியன்; பக். 208; ரூ.200; நிவேதிதா பதிப்பகம், சென்னை- 92; 89393 87276.
16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பே இந்த நூல். ஒன்றுக்கொன்று மாறுபட்ட வழித்தடங்களில் பயணிக்கின்ற கதைகள்.
'புகைப்படம்' எனும் சிறுகதையில் லட்சுமி புகுந்த வீட்டில் தனது தந்தையின் புகைப்படத்தை மாட்டுவதற்காகப் படும்பாடும், மாமியாரின் கடும் சொற்களும் படிக்கப் படிக்க கண்ணீர் வழிகிறது.
'உயிர் மண்' எனும் சிறுகதையில் அரசுப் பணியில் ஓய்வு பெற்ற மச்சசாமி 25 ஆண்டுகளாக வாழ்ந்த குடியிருப்பை காலி செய்யும்போது, மரங்களையும், செடிகளையும் பிரிந்துவிடுவதைக் கவலைப்படுவதைப் பார்க்கும்போது, இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற உணர்வும், மரக்கன்று நடுதலின் அவசியமும் ஏற்படுகின்றன. உடல் உபாதைகளுக்கு என்னென்ன மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு மருத்துவக் குறிப்பே வந்துவிடுகிறது.
'விருது' எனும் சிறுகதையில் பத்தாம் வகுப்பு மாணவி பூரணிக்கு திருமணம் நடப்பதை தோழி பொற்கலைக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புகிறார். தகவலறிந்த தலைமை ஆசிரியர் இரு
ஆசிரியர்களை அழைத்துச் சென்று, அதிகாலையில் திருமணத்தை நிறுத்த ஆட்டோவில் பயணிக்கும்போது உரையாடலும், பெற்றோருக்கு கூறும் அறிவுரையும் இளம்வயது திருமணம் செய்வோருக்கு ஒரு படிப்பினையை உண்டாக்கும் என்பது ஐயமில்லை.
இவ்வாறாக, படித்து ரசித்து பொழுதைப் போக்க மட்டுமல்லாமல் ஒவ்வொரு கதையும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே நூலாசிரியர் எழுதியிருக்கிறார். அனைவரும் படித்து, பாதுகாக்க வேண்டிய புத்தகம்தான் இது!