குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் - வேமனரின் நீதிப்பாடல்கள் - ஓர் ஒப்பாய்வு

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் - வேமனரின் நீதிப்பாடல்கள் - ஓர் ஒப்பாய்வு

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் - வேமனரின் நீதிப்பாடல்கள் - ஓர் ஒப்பாய்வு - பத்மா முத்துகிருஷ்ணன்;  பக். 113;  ரூ. 110, பாப்லோ பதிப்பகம், உடுமலைப்பேட்டை; 9443372010. 

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குமரகுருபரர்,  துறவி வேமனர் பாடல்களை ஒப்பாய்வு செய்திருக்கிறார் நூலாசிரியர். 16 நூல்களை எழுதிய குமரகுருபரர், மதுரையில் இருந்தபோது திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளின் சாரமாக எழுதியதுதான் நீதிநெறிவிளக்கம். சமுதாயத்தின் அனைத்து கோணங்களையும் கருத்தில்கொண்டு சுமார் 2 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார் வேமனர். அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்றவராக வாழ்க்கையின், நிலையாமையின் நுட்பங்களை எளிய மொழியில்  பேசுகிறார் வேமனர்.
காலச்சூழ்நிலை, சமயக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், இல்வாழ்வும் நெறிகளும், அரசியல் அறம், பொது நீதி, வெளிப்படுத்தும் கற்பனை என ஏழு இயல்களில் இருவரின் பாடல்
களும் ஒப்பிடப்படுகின்றன.

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்தில் சமயம் பற்றி அதிகம் இடம்பெறவில்லை. ஆனால், சிவனடியாராக இருந்தபோதிலும் புறவேடங்களைப் பேசும் - திருநீறு பூசுதல், மக்கா - மதீனா பயணம் - இவருடைய பாடல்கள் அங்கதமானவை. இன்றைக்கு அவர் இருந்தால் உறுதியாக நடவடிக்கையில் சிக்க வாய்ப்புண்டு!

வீடுபேற்றைத் தருவது கல்வி என்பதில் இருவருமே உடன்பட்டிருந்து அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றனர். மனத்தூய்மை, கற்பு போன்றவை பற்றிய கருத்துநிலைகளில் இருவரும் ஒரேமாதிரி சிந்தித்துள்ளனர். அரசியல் அறம் பற்றிய ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொண்ட பாடல்களிலிருந்து, ஒரு விஷயத்தைக் குமரகுருபரர்  எவ்வாறு நயமாகக் கூறுகிறார் என்பதுடன், அதையே வேமனர் எவ்வாறு இடித்துரைக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது. குமரகுருபரரையும் வேமனரையும் எளிதில் அறிமுகம் செய்துகொள்ளக் கூடிய நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com