தமிழர் வரலாறு - த.சுந்தரராசன்; பக்.240; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044 - 2536 1039.
நூலின் தொடக்கத்தில் தமிழின் தொன்மையை விளக்கியதுடன், தமிழ்ச் செம்மொழியான வரலாறு, செம்மொழித் தகுதி பெற்றதற்கான இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் (ஆங்கிலத்தில்), தமிழ்ச் சங்கங்கள் உருவான வரலாறு, மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச் சங்கம், பெங்களுர் மற்றும் தில்லி தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புகள் ஆகியவை கூறப்பட்டுள்ளன.
தனித்தமிழ் இயக்கம் உருவாகி வளர்ந்தது மற்றும் வளர்த்தோர் பற்றிய தகவல்களும்; தமிழ்த்தாய் கோயில் அமைந்த இடங்கள், அமைத்தவர்கள் பற்றிய தகவல்கள், தொல்காப்பியர் சிலை உருவான விதம், சிற்பிகளின் செயல் திறம், அமைந்த இடம், தொல்காப்பியர் பிறந்த நாளை சித்திரை முதல் நாளாக ஏற்றுக்கொண்ட அரசின் அரசாணைப் பதிவு ஆகிய தகவல்கள், கண்ணகிக் கோட்டம் உருவான வரலாறு, தமிழிசை இயக்கம் உருவான விதம், இவ்வியக்கத்திற்குப் பாடுபட்டோர்; திருவள்ளுவர் இயக்கங்கள், திருக்குறளை மொழிபெயர்த்த சான்றோர் பட்டியல், மறைமலையடிகள் தலைமையில் நடந்த (1933) திருவள்ளுவர் விழா என தமிழ் மொழியுடனும், தமிழருடனும் தொடர்புடைய வரலாற்றுத் தரவுகள்தாம் இந்நூல். முக்கியமான சில நிகழ்ச்சிகளுக்கான அரிய புகைப்படங்களை இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு.