மனிதகுலம் : நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு - ருட்கர் பிரெக்மன்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக். 516; ரூ. 599; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பிரகாஷ் புக்ஸ், மேக் டவர்ஸ், 307/165, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை - 600095.
உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்த பல நூல்களின் ஆசிரியரான ருட்கர் பிரெக்மனின் "ஹ்யூமன் கைன்ட் - ஹோப்ஃபுல் ஹிஸ்டரி' நூலின் மொழி பெயர்ப்பு இந்நூல்.
"எல்லோரும் நல்லவரே' என்பதுதான் இத்தனை பெரிய நூலில் அவர் சொல்ல வரும் ரத்தினச் சுருக்கமான ஒற்றை வரி.
புகழ்பெற்ற "த பிரின்ஸ்' என்ற மாக்கிய வெல்லியின் அரசியல் அடிப்படை நூலின் ஆதாரமான கருத்துகளை - தன்னலம், அதிகாரத்தை அடைதல், கும்பல் உளவியல் - ஆகிய எல்லாவற்றையும் நொறுக்குகிறது மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு என்ற இந்த நூல்.
புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆய்வுகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் வழி விவாதத்தின் மூலம் மனிதகுல வரலாற்றைப் புதிய அணுகு முறையில் விவரிக்கிறார் பிரெக்மன்.
லண்டன் மாநகரின் மீது ஹிட்லர் படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலின்போது, பல்லாயிரக்கணக்கில் உயிர்ப்பலி நடந்தும் கூட, சர்ச்சில் உள்பட அனைவருடைய எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக, மக்கள் எவ்வாறு இயல்பாக நடந்துகொண்டார்கள் என்பது சிறப்பான முன்னுதாரணம்.
நூலில் நாகரிகத்தின் சாபக்கேடு, அதிகாரம் ஒருவரை எப்படிச் சீரழிக்கிறது? ஜனநாயகத்தின் உண்மையான தோற்றம் ஆகிய இயல்கள் மிகவும் கவனத்துக்குரியவை.
வழக்கமான சுயமுன்னேற்ற நூல்களைப் போல அல்லாமல் ஒரு நாவலைப் போல விறுவிறுப்பாக வாசிக்க முடிவதும் நடையின் சிறப்பு. நாகலட்சுமி சண்முகத்தின் சிறப்பான மொழிபெயர்ப்பும் நெருடாமல் வாசகரை நூலுடன் அழைத்துச் செல்கிறது.