வண்ணச் சீரடி
வண்ணச் சீரடி (மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் மீட்டெடுப்பு போராட்ட வரலாறு) - மு.ராஜேந்திரன்; பக். 352; ரூ.450; அகநி வெளியீடு, வந்தவாசி- 604 408; 94443 60421.
மங்கலதேவி கண்ணகிக் கோட்டத்தில் சித்ரா பௌர்ணமி நாளன்று கேரள அரசின் அனுமதியோடு நடக்கும் விழா, சிறப்புகளைப் படிக்கும்போது நேரில் கண்ட திகைப்பு ஏற்படுகிறது. சிலப்பதிகாரத்துக்கும், மூவேந்தர் வரலாற்றுக்கும் 2-ஆம் நூற்றாண்டின் ஆதாரமாக இருக்கும் மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் சிதிலமடைந்திருப்பது, பிற நாள்களில் பிரார்த்தனையின்றி கண்ணகி காத்திருப்பது போன்ற விவரங்கள் அடங்கிய நூல். 40 ஆண்டு போராட்டம் அரிய புகைப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
கண்ணகிக் கோட்டத்துக்குச் செல்ல தமிழக எல்லையில் அத்தியூத்து வழியாக 6 கி.மீ. நடந்து செல்ல ஒரு பாதையும், கேரளத்தின் குமுளி நகரிலிருந்து 14 கி.மீ. கச்சா ரோடு வழியாக மற்றொரு பாதையும் உள்ளதை அறிய முடிகிறது.
கண்ணகி கோட்ட கண்டுபிடிப்பாளரான சி.கோவிந்தராஜனாருக்கான பாராட்டு விழாவும், அவருக்கும் நூலாசிரியர் மு.ராஜேந்திரனுக்கும் இருந்த நட்புறவும் வியப்பை அளிக்கிறது.
1999-ஆம் ஆண்டில் விழா தொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் பஷிர் அகமதுவுக்கும், நூலாசிரியருக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம், இதற்கு சில நாள்கள் கழித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி, "வினை ஒன்றை ஒருவர் மீது திணித்தால் அதற்கு அவர் எதிர்வினை ஆற்றித்தானே ஆக வேண்டும்'' என்று சொன்னதும் சிறப்பு. தேனி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நூலாசிரியர், 40 ஆண்டுகால போராட்டக் களத்தைச் சொல்ல இவரைவிட வேறு யாரால் முடியும்?