பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும் - தொகுப்பாசிரியர் ப.கு. பாபு, பக். 352; ரூ.350, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை- 20; 044-24412589.
கரோனா காலத்தால் நேரிட்ட பொருளாதாரச் சீர்குலைவுகளையும், மீள்வதற்கான வழிமுறைகளையும் விவரிக்கிறது இந்த நூல்.
ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 19 ஆய்வுக் கட்டுரைகளின் வழி எழுதப்பட்ட ஒவ்வொரு துறையுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. சில கட்டுரைகளில் புள்ளி விவரங்கள் சலிப்பூட்டக் கூடியனவாகத் தென்பட்டபோதிலும் தீவிரமான பொருளியல்சார் விஷயங்கள்கூட எல்லா வாசகர்களுக்கும் எளிதில் புரிவதாகக் கூறப்பட்டிருப்பது சிறப்பு.
விவசாயக் கொள்கைச் சீர்திருத்தங்கள், வர்த்தகமும் தொழிலும் ஆகிய பிரிவுகளில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. வேளாண் மேம்பாட்டு நடவடிக்கைகளுடன், தற்சார்புடன் கூடிய உள்நாட்டுத் தொழில், விநியோகச் சங்கிலிகளின் மேம்பாடு முன்னோக்கிய வழிகளில் ஒன்றாகக் கட்டுரைகளில் சுட்டப்படுகிறது.
ஆடைத் தொழிலில் முன்னேற்றம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டிய உத்திகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
1930-களின் பெரும் பொருளாதார மந்த நிலையைவிட மோசமாகவே நிலைமை மாறியிருக்கிறது. குறுகிய, நீண்ட காலப் பரிந்துரைகளை உடனடியாகப் பரிந்துரைக்கும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, கரோனா காலத்துக்குப் பிந்தைய காலத்தின் வீழ்ச்சிகள், தத்தளிப்புகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டு ஆலோசனைகளை எடுத்துரைக்கலாம்.
ஆங்கிலக் கட்டுரைகளை தமிழிலும் வாசகர்களை, சென்றடைய வேண்டியவர்களைச் சென்றடையும் வகையில், மொழிபெயர்த்துத் தந்திருப்பது வரவேற்கத்தக்கது.