1877: தாது வருடப் பஞ்சம் - வில்லியம் டிக்பி; தமிழில்: வானதி; பக்.232; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; 044- 4200 9603.
1877 தாது வருடத்தில், தென்னிந்தியா குறிப்பாக மெட்ராஸ் மாகாணம் பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்திய அரசு - மெட்ராஸ் மாகாண அரசு - பஞ்ச நிவாரண ஆணையர்
ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு பஞ்சகால நிகழ்வுகளைப் புள்ளிவிவரங்களுடன் இந்நூல் விவரிக்கிறது.
கடும் பஞ்சத்தால் பசி, பட்டினி, காலரா உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளான போதும் ஆங்காங்கே மக்கள் சாதிப் பற்றுடன் இருந்ததையும், அதனால் உயிரிழக்க நேர்ந்ததையும், சில ஆங்கில அதிகாரிகள் இன வெறியுடன் செயல்பட்டதையும் நடுநிலையுடன் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து அரசியை இந்தியப் பேரரசியாக அறிவிக்க விழா நடந்து கொண்டிருந்தபோது, பஞ்சத்தால் மெட்ராஸ் மாகாணத்தில் 65,000 பேரும், மைசூரில் 13,000 பேரும் இறந்திருந்தனர். பம்பாயில் எத்தனை பேர் இறந்தனர் என்பதில் மௌனம் நிலவியது.
அப்போது பஞ்ச நிவாரண முகாம்களில் நடைபெற்ற முறைகேடுகள், நிவாரண நிதிகளில் உள்ளூர் அலுவலர்களின் ஊழல், உடல் வலுவுள்ளவர்கள் அரசின் நிவாரணத் திட்டங்களில் பங்கேற்று உழைத்து ஊதியம் பெறாமல் நிவாரண முகாம்களில் தங்கி முறைகேடாக ஊதியம் பெற்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
மதுரை, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 3லட்சம் பேர் பஞ்சம் பிழைக்க இலங்கைக்குத் தோட்டத் தொழிலாளர்களாக கப்பலில் சென்றுள்ளனர்.
பஞ்சத்தை ஆங்கிலேயர்கள் எதிர்கொண்ட விதமும், பஞ்சம் ஏற்படுத்திய பேரழிவுகளும் மனசாட்சியை உலுக்கும் விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.