வீரமாமுனிவர் - அமுதன் அடிகள்; பக். 112; ரூ.150; தனிநாயக அடிகள் தமிழியல் நிறுவனம், திருச்சி- 620 007; 94430 72900
இத்தாலியில் உள்ள காஸ்ட்ரான் டெலி ஸ்ட்ரூவி என்ற ஊரில் 1680-இல் பிறந்த வீரமாமுனிவர், 1710-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்து தொண்டாற்றினார். அவரது தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டுகள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தாலியில் அவர் பிறந்த ஊரின் சிறப்பு, குடும்பத்தினர் விவரம், அங்கு அவர் ஆற்றிய சமயத் தொண்டு என்று இத்தாலிக்கே சென்ற நூலாசிரியர் தான் தேடி திரட்டிய தகவல்களை விரிவாக வெளியிட்டுள்ளார்.
பெஸ்கி குடும்பத்தைச் சேர்ந்த வீரமாமுனிவரின் முன்னோர்கள், கல்வி, சபைப் பயிற்சி போன்றவற்றை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைதவிர, முனிவரின் எழுத்துச் சீர்திருத்தம், அவர் இயற்றிய அகர முதலிகள், நூல்கள், பணிபுரிந்த ஊர்கள் என்று விலாவரியாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதிக்காலத்தைப் பற்றியும் குறிப்பிட்டு, கல்லறை அமைந்த இடத்தைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், வீரமாமுனிவர் தொடர்புடைய இடங்கள் புகைப்படங்களாகவும் புத்தகத்தின் கடைசிப் பக்கங்களை அலங்கரிக்கின்றன. அவரை பற்றி அறிய விரும்பும் தமிழ் ஆர்வலர்கள் அவசியம் படிக்கலாம். இதோடு, வெளிநாடு வாழ் மக்கள் தமிழ் மீது கொண்ட பற்று குறித்தும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் தலைமுறைக்கும் பயன்படும் புத்தகம்!