அழகு கூடும் முகங்கள் - வெற்றிநிலவன்; பக்.156; ரூ.150; பைரவி பதிப்பகம், சென்னை-37; 90032 30389.
சமூகச் சிந்தனைகளை சாராம்சமாகக் கொண்ட 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
இறப்பில் கூட ஜாதி, மதம் பாரபட்சம் பார்க்கும் இன்றைய சமூக அவலத்துக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்துள்ளது முதல் கதையான 'வேட்கை- ஒன்னா இருக்க கத்துக்கணும்'.
ஆணவம் அழிந்து அறிவுத் தெளிவு பிறந்தால் முகத்தில் அழகு அதிகரிக்கும் என்பதை 'அழகு கூடும் முகங்கள்' கதை விளக்குகிறது.
காதல் மணம் புரிந்து குடும்பம் நடத்த முடியாமல் பொருளாதாரம் தேடி, சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடிய இளைஞரின் வலியை 'புரோட்டா
மாஸ்டர்' கதை அழுத்தமாக பதிவு செய்கிறது.
மனித நேயத்தை முன்னிறுத்தும் 'தேதி தெரியாத பயணங்கள்' மனதை வருடுகிறது. வாசிப்பை சுவாசிப்பாகக் கொள்ள வேண்டும் என்பதை சிந்தையில் உறைக்கும்படி உரைக்கும் 'நெற்றி வெளிச்சம்' இன்றைய காலத்துக்கு மிகத் தேவையான ஒன்று.
அனைத்துக் கதைகளும் ஒவ்வொரு கருத்துகளைத் தாங்கியதாக இருப்பினும், கதைகளை, கதை வழி உரையாடல்களை சுவாரஸ்யம் குறையாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார் நூலாசிரியர். நூலில் இடம் பெற்றுள்ள முத்திரைப் பதிக்கும் கதைகள் அனைத்தும் வாசகர்களுக்கு நிறைவைத் தரும்.