ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் - ஆ.சிவசுப்பிரமணியன்; பக். 96 ;ரூ. 110; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்-629001; 04652- 278525.
ஆணவம், பெருமிதம் காரணமாக, கொல்லப்பட்டு தெய்வமானவர்களின் கதைகள். இதுபோன்ற தெய்வங்கள் தென் மாவட்டங்களில் அதிகமாக வழிபடப்படு
கின்றன. இந்தத் தெய்வங்களின் விழா, சடங்கு, சாமியாடிகளின் ஆட்டமுறை போன்றவற்றை தெளிவாக ஆய்வு செய்வதன் மூலம் இவர்களின் மூலங்களைக் கண்டறிய நூலாசிரியர் முயற்சித்துள்ளார்.
இதில் வித்தியாசமானது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காணப்படும் வண்டிமறிச்சி அம்மன் கோயில் தொடர்பான கதை. பெற்றோரை இழந்த அண்ணனும், தங்கையும் நெசவாளர்கள் நூலுக்கு கஞ்சி போட வைத்திருந்த பாவுக் கஞ்சியைக் குடித்துவிட்டனர். இதனால் நெசவாளர்கள் கோபம் அடைந்து இருவரையும் அடித்துக் கொன்றனர். பின்னர், நெசவாளர்கள் துணியை ஏற்றிச் சென்ற வண்டியை இருவரும் ஆவியாக வந்து மறித்ததால், வண்டிமலையன்- வண்டிமலைச்சி என நெசவாளர் குடியிருப்புகளிலேயே கோயில் கட்டப்பட்டு வழிபடப்படுகின்றனர்.
இதுபோல ஜாதி மீறிய காதலால் கொல்லப்பட்ட அழகப்பன், சின்னதம்பி, உடையாண்டியம்மா- சங்கரகுட்டி தேவர், அழகம்மை-அழகப்பன், சாத்தான்- சாம்பான், குட்டி குலையறுத்தான்சாமி, ஒண்டிவீரன்- எர்ரம்மா, சிப்பித்திரட்டு சாமி, பட்டபிரான்- பூச்சியம்மன், ஐயப்பட்டால் கொலையுண்ட மாடத்தி அம்மன், புதுப்பட்டி அம்மன் உள்ளிட்ட 14 கதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
கிராமிய தெய்வங்களின் ஆரம்ப வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் நூல்.