சிந்துக்குத் தந்தை - அரிமளம் சு.பத்மநாபன்; பக்.238; ரூ.260; காவ்யா, சென்னை-24; 044-2372 6882.
நூலாசிரியர் இசைத்தமிழையும் தமிழிசையையும் நன்கு அறிந்தவர். இதனால், நூலில் பாரதியின் சிந்து பாக்கள், பா வகைகள், பிற்காலச் சிந்துப் பாடல்கள் என ஆராய்ந்துள்ளார். 2004-ஆம் ஆண்டில் 'மகாகவி பாரதியார் ஆய்வுத் தொடர்களின் 6-ஆவது வெளியீடாக வந்த 'மகாகவி கருத்தியல் நெறி' என்னும் நூலில் இடம்பெற்ற 'சிந்துக்குத் தந்தை' என்ற கட்டுரையும், அதன் கருப் பொருளும் நூலாக உருப்பெற்றுள்ளது என்கிறார் நூலாசிரியர்.
'செந்தமிழ்த் தேனீ', 'சிந்துக்குத் தந்தை' என்று பாரதியாரை புகழும் பாரதிதாசனின் கவிதையே நூலுக்கு அடிப்படை. பாவேந்தரின் இந்தப் புகழுரையை தமிழுலகம் முழுவதும் வழிமொழிந்திருப்பதற்கான சான்றுகளை இந்நூல் தொகுத்து தந்துள்ளது.
தொல்காப்பியம் தொடங்கி, சிந்துப்பா விளக்கங்கள், பாரதியின் முன்னோடிகள், இசைத்தமிழ் விளக்கங்கள் எனப் பல்வேறு ஆய்வுத் தரவுகள் பண்டைத் தமிழ் உரையாசிரியர்கள் வழிநின்று நூல் முழுவதும் தகுந்த சான்றாதாரத்துடன் தரப்பட்டுள்ளன.
சிந்து என்ற சொல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே தமிழில் வழங்கப்பட்டிருக்கிறது என்ற அரியதொரு தகவலை நூல் வெளிப்படுத்துகிறது. பாரதியின் முன்னோடிகளும் சிந்துவைப் பற்றி போற்றுவதும் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.
பாரதியின் சிந்து பாடல்களுக்குண்டான சீர் பிரித்து தந்திருப்பதுடன் பாடுவதற்கேற்ற வகையில் சுர, தாளக் குறிப்புகளையும் தந்திருப்பது சிறப்பு.
பாரதி பற்றாளர்கள் மட்டுல்ல; தமிழ் ஆர்வலர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய அற்புத நூல் இது.