நாட்டுக் கணக்கு - சோம. வள்ளியப்பன்; பக்.268; ரூ.275; கிழக்கு பதிப்பகம், சென்னை- 14; 044-42009603.
சிக்கலான பொருளாதாரக் கோட்பாடுகளை எளிமையாக விளக்க இந்த நூல் முற்படுகிறது. நாட்டுக்காகத் திட்டமிடப்படும் பட்ஜெட், வரி விதிப்பு, மானியங்கள், கடன், வட்டி விகிதம் போன்ற விஷயங்களைத் தனித்தனியாகக் கையாண்டு எழுதியுள்ளார். அரசு எப்படி பட்ஜெட்டை திட்டமிடுகிறது என்று விரிவாக சொல்லித் தருகிறார்.
வரி விகிதங்களின் வகைகள், இறக்குமதி வரிகளின் அவசியமும் முக்கியத்துவமும், இலவசங்கள் ஏற்படுத்தும் சிக்கல்கள் அலசப்பட்டுள்ளன. ரூபாய் மதிப்பில் எதனால் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது; அமெரிக்க டாலர் ஆதிக்கத்தில் அந்நிய செலாவணியின் முக்கியத்துவம் தனி அத்தியாயமாகத் தரப்பட்டுள்ளது.
புரிந்தும் புரியாமலும் இலங்கை பொருளாதாரப் பிரச்னையை எல்லோரும் அலசுகிறார்கள். இந்த நூலில் பொருளாதாரப் பிரச்னை இலங்கையை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை விரிவாக விளக்குகிறார்.
கரோனா தொற்றுப் பரவலால் உலக அளவில் பொருளாதாரத் தொய்வு ஏற்பட்டது. சர்வதேச குழப்பத்தின் இடையிலும் இந்தியா எவ்வாறு பொருளாதாரச் சிக்கல்களை சமாளிக்கிறது என்பதையும் தனி அத்தியாயத்தில் தெளிவாக விளக்குகிறார்.
ஏன் விலைவாசி உயர்கிறது? வேறு வழிகளில் வரி விதிப்பதற்கு சாத்தியம் இல்லையா? இலவசங்கள் சரியா? போன்ற கேள்விகளுக்குத் தெளிவாக விடையளிக்க முயற்சி செய்கிறார் நூலாசிரியர். பொருளாதாரத்தின் பல அடிப்படைக் கூறுகளை தெரிந்து கொள்ளும் கையேடாகவே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.