புலன் விசாரணை ஒரு கலை - பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ்; பக்.200; ரூ.300;எழிலினி பதிப்பகம், சென்னை-8; ✆ 044-2819 3206.
புத்தகத்தின் தலைப்பே எதைப் பற்றியது என்பதை உணர்த்திவிடுகிறது. நூலாசிரியர் நாடறிந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி. அவர் காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் இருந்து, ஐஜியாக ஓய்வு பெற்றது வரை தான் சந்தித்த சிக்கலான வழக்குகள், சுவாரஸ்யமான வழக்குகளின் புலன் விசாரணை குறித்து நுட்பமான தகவல்களுடன் விவரித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் ஏற்படும் ஜாதி பிரச்னைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை தனது கட்டுரையில் ஆழமாகக் கூறியுள்ளார். திட்டமிட்டு நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கும், எதார்த்தமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் நுணுக்கமாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குற்றவாளியைத் துன்புறுத்தி விசாரணை செய்து உண்மையை வரவழைப்பதை விட, அந்த குற்றவாளியின் மனதை அறிந்து, அவரிடம் மனம்விட்டு பேசுவதின் மூலமாகவும் உண்மையை வெளிக் கொண்டு வர முடியும் எனக் கூறும் நூலாசிரியர், ஒரு பயங்கரவாதியிடம் அவரது குடும்பத்தினர் நலனையும், அவர்களது கஷ்டத்தையும் கேட்டறிந்த சில நிமிஷங்களில், அவர் மனம் திறந்து வழக்குத் தொடர்பான கூறிய தகவல்களால், பிற பயங்கரவாதிகளையும் கைது செய்ய முடிந்தது எனக் கூறியுள்ளார்.
புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 28 கட்டுரைகளும், 28 வழக்குகளின் விசாரணையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும், குற்ற வழக்குகளில் புகார்தாரரையும், குற்றவாளியையும் காவல்துறையினர் எப்படி அணுக வேண்டும்?ஒரு குற்றவாளியை விசாரணை அதிகாரி, எப்படி அடையாளம் காண முடியும் என்பன போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குற்ற வழக்குகளின் விசாரணையில் ஏதேனும் சிறு பிழை ஏற்பட்டாலும் காவல் துறை தனது மதிப்பை இழந்துவிடும் என்று புத்தகத்தின் இறுதியில் நூலாசிரியர் எச்சரித்துள்ளார்.