பாடல் 9:
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே
விளக்கம்:
நிரந்து=வரிசையாக முறையாக; பரந்து=பரவி; மேல்மிசை=மேலிடத்தில்; கரந்து=ஒளித்து; நிரந்தரம்=எப்போதும்; நேடி=தேடி; முதலில் ஒளித்தவனாக இருந்தாலும் பின்னர் அருள் புரிந்து வெளிப்படச் செய்தவன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒளிக்கப் பட்ட கங்கை நதி பின்னர் சிறிது சிறிதாக, அவனது அருளால் வெளிப்படுகின்றது. பிரமனும் திருமாலும் தங்களது செருக்கினை ஒழித்து இறைஞ்சிய போது, அவர்களுக்கு இலிங்க வடிவத்தில் காட்சி அளித்ததும் பெருமானின் திருவருளினால் தானே.
பொழிப்புரை:
வரிசை வரிசையாக வரும் பல அலைகளுடன் பரந்து மிகுந்த வேகத்துடன் பாய்ந்து கீழே இறங்கிய கங்கை நதியை தனது சடையினில் நிரந்தரமாக இருக்கும் வண்ணம் ஏற்றுக் கொண்டு அதை மறைத்து வைத்து மகிழ்ந்தவனும், முறையாக ஒருவர் பன்றி வடிவமெடுத்து கீழ்நோக்கியும் மற்றொருவர் அன்னமாக மேலே பறந்து சென்ற போதும், திருமால் மற்றும் பிரமன் தேடி அலைந்த போது அவர்கள் காண இயலாத வண்ணம் நீண்டு நின்று தனது அடியையும் முடியையும் மறைத்தவனும் ஆகிய பெருமான் உறையுமிடம் கருப்பறியலூர் தலமாகும்.