பாடல் 3:
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாக
போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற
நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே
விளக்கம்:
வேள்வி முதலாக=வேள்வி முதலாகிய பல நற்செயல்களில் ஈடுபட்டு; போதினொடு= பொழுதோடு, உரிய காலத்தில்; போது=அப்போது மலர்ந்த மலர்; சம்பந்தர் இந்த தலம் சென்ற காலத்தில், இந்த தலத்தில் வேதியர்கள் அதிகமாக இருந்தனர் போலும்; அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய ஆறு தொழில்களையும் செய்து இருந்தமை, வேள்வி முதலாக என்ற சம்பந்தரின் கூற்று நமக்கு உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
வேதியர்கள் வேதம் ஓதுவது, வேதம் கற்றுக் கொடுப்பது, வேள்வி வளர்ப்பது, வேள்வி செய்து வைப்பது ஆகிய செயல்களை புரிந்து கொண்டு, தவறாமால் ஒவ்வொரு பொழுதிலும் அப்போது மலர்ந்த பூக்களை பெருமானுக்கு மாலைகளாக சாத்தியும் அருச்சனை செய்தும் எங்களது நாதனே என்று வழிபட, அவர்களது வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளும் இறைவன் பிரளய காலத்தில் அடர்ந்த இருளினில் தனது காதில் தொங்கும் வண்ணம் அணிந்துள்ள குழை அசைந்து ஆடும்படி நடனம் ஆடுகின்றான். இவ்வாறு குழை அசைந்து ஆடியவாறு தொங்கும் காதினை உடைய பெருமான் இருக்கும் தலம் கருப்பறியலூர் ஆகும்.