பாடல் 6:
பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே
விளக்கம்:
நளிர்=குளிர்ந்த; பில்குதல்=சொட்டுதல்; நவிலுதல்=சொல்லுதல், பழகுதல், விரும்புதல் என்று பல பொருள் கொண்ட சொல். முந்தைய பாடலில் பெருமான் எலும்புகளை ஆபரணமாக அணிந்திருக்கும் நிலையினை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் பூதங்கள் சூழ பெருமான் இருக்கும் நிலையை குறிப்பிடுகின்றார். எலும்புகள் பெருமானின் திருமேனியில் அழகுடன் மிளிர்வது போன்று பூதங்கள் சூழ அவன் இருப்பதும் அழகாக உள்ளது என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
தன்னைச் சுற்றி பூதங்கள் இருந்த போதும் அழகுடன் விளங்கும் பெருமான், பூந்தராய் நகரத்தின் தலைவனாக இருக்கின்றான். குளிர்ந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், அந்த கங்கை நீரினை சொட்டு சொட்டாக வெளியேற்றுகின்றான். அவனது சடை நீண்டும் அழகு உடையதாகவும் விளங்குகின்றது. இத்தகைய பெருமானின் திருவடிகளின் பெருமையை தினமும் சொல்லச் சொல்ல, நமக்கு நாள்தோறும் பல இன்பங்களை இறைவன் தருவான்.