125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 8

இறைவனை சரணடைந்தால்
125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 8


பாடல் 8:

    போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய்
    காதலித்தான் கழல் விரல் ஒன்றினால்
    அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள்
    பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே

விளக்கம்:

போதகம்=யானை; பிஞ்ஞகன்=அழகான தலைக் கோலத்தை உடையவன்; பெருக்கி=பெரிய அளவில்; இந்த கயிலை நிகழ்ச்சி மூலம், பிழை புரிந்தவர்களும் தங்களது தவறினை உணர்ந்து, இறைவனை சரணடைந்தால், அவர்களது தவறுகள் மன்னிக்கப்படுவதுடன் இறைவனது அருளும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது உணர்த்தப் படுகின்றது.   

பொழிப்புரை:

தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து அந்த தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்ட சிவபெருமான், மிகுந்த விருப்பம் கொண்டு பூந்தராய் நகரில் உறைகின்றான். வீரக்கழல் அணிந்த தனது கால் விரல் ஒன்றினை, கயிலாய மலையின் மீது அழுத்தி, அந்த மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் ஆற்றலை அழித்தவன் ஆவான். பின்னர் அரக்கன் சாமகானம் பாடி தன்னைப் புகழ்ந்ததும், பெரிய அளவில் அவனுக்கு அருள் புரிந்து நீண்ட வாழ்நாள், சிறந்த வாள் மற்றும் இராவணன் என்ற பெயரினையும் அளித்தவன் பெருமான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com