பாடல் 10:
சற்றேயும் தாம் அறிவில் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணம் ஒர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே
விளக்கம்:
சொற்றேயும்=சொல் தேயும், பயனற்ற அறிவற்ற பொருளற்ற தன்மையால் நாளடைவில் மறக்கப்பட்டு தேய்ந்து போதல்; சமணர்கள் மற்றும் பயனற்ற பிதற்றல்கள் காலங்களைக் கடந்து நிற்க முடியாமல் அழிந்துவிடும் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
சிறிதும் அறிவில்லாமல் சமணர்களும் புத்தர்களும் சொல்லும் சொற்கள், பொருளின்றி பயனின்றி இருப்பதால் நாளடைவில் மறக்கப்பட்டு அழிந்துவிடும். இவ்வாறு அத்தகைய பயனற்ற பொருளற்ற சொற்கள் அழியும் வண்ணம் செய்வானும், சிறந்த செம்மையான பொருளாக உடைய சிவநெறியினை உடையவனும், வற்றாத நீர்நிலைகள் கொண்ட மணஞ்சேரி தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனது திருப்பாதங்களை பற்றுக்கோடாக பற்றிக்கொள்ளும் அடியார்களின் மேல் வினைகள் பற்றாமல் பிரிந்து விடும்.