146. மண் புகார் வான் - பாடல் 7

சிவபெருமானின் அடியார்கள்
146. மண் புகார் வான் - பாடல் 7


பாடல் 7:

மங்குல் தோய் மணிமாடம் மதி தவழு நெடு வீதிச்
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடு மலர்க் கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்கங்கள் பொருள் அலவே

விளக்கம்:

சென்ற பாடலில் பெருமானின் அடியானாகிய சந்திரன் பெற்ற பயனை குறிப்பிட்ட சம்பந்தர், பெருமானின் அடியார்களின் மனப்பாங்கினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் அடியார்கள் சுவர்கத்தை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். மண் புகார் வான் புகுவர் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் பெருமானது அடியார்கள் நிலவுலகத்தில் மீண்டும் புகாமலும் தேவர்களின் உலகத்திற்கு செல்லாமலும் முக்தி உலகத்தினை அடைவார்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவது இத்தகைய அடியார்களை குறிப்பிட்டு பாடியதோ என்று தோன்றுகின்றது. கொங்கு=நறுமணம்; தொங்கல்=மாலை; பொருது=பொருத்தி சேர்க்கும்; திரை=அலைகள்; புலம்பும்=ஒலிக்கும்;

பொழிப்புரை:

வானில் உள்ள மேகங்களைத் தொடும் வண்ணமும் சந்திரன் தவழும் வண்ணமும் உயர்ந்த மாடங்களைக் கொண்ட நீண்ட வீதிகளை உடையதும், சங்குகளைத் தங்களது கரங்களால் கொணர்ந்து கரையில் சேர்க்கும் கடல் அலைகளின் ஓயாத ஆரவாரம் கேட்பதும் ஆகிய சாய்க்காடு தலத்தினில் உறைபவன் சிவபெருமான். தனது நறுமணத்தால், உடலில் வரிகளைக் கொண்டுள்ள வண்டுகளைக் கவர்ந்து அவ்வாறு வந்த வண்டுகள் தேன் உண்ட களிப்பினில் இன்னிசை பாடும் வண்ணம் அவற்றை கிறங்கடிக்கும் கொன்றை மலர்களால் அமைந்த மாலையினை அணிந்த பெருமானின் அடியார்கள் சுவர்கம் தரும் இன்பத்தினை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். ஏனெனில், சுவர்கம் தரும் இன்பத்தை விட மிகவும் சிறந்ததும் என்றும் அழியாத பேரானந்தத்தை தரும் சிவலோகத்தை சென்று அடைவதையே அவர்கள் விரும்புவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com