146. மண் புகார் வான் - பாடல் 9

திருமால். முதலில் வாமனனாக
146. மண் புகார் வான் - பாடல் 9

பாடல் 9:

    வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும்
    ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை
    தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம் பெருமானைத்
    தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே
 

விளக்கம்:

வையம்=பூமி, நீர் ஏற்றான்=தானமாக ஏற்றுக்கொண்டு மகாபலி சக்ரவர்த்தி தத்தமாக அளித்த நீரினை ஏற்றுக்கொண்ட திருமால். முதலில் வாமனனாக சென்று மூன்றடி மண்ணினை  தானமாக கேட்ட திருமால், மகாபலி அதனை தருவதற்கு ஒப்புக்கொண்டதை உணர்த்தும் பொருட்டு, வாமனரின் கையினில் நீர் வார்த்தான். இவ்வாறு நீர் வார்ப்பதை தத்தம் செய்தல் என்று கூறுவார்கள். வாமனனாக சென்ற திருமால், நீரினை ஏற்ற பின்னர், திரிவிக்ரமனாக மாறி தனது இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்தார் என்று பாகவதம் உணர்த்துகின்றது. ஐயன்=தலைவன்; தையலார்=மகளிர்; ஓவா=இடை விடாத; தேறோம்=மதிக்க மாட்டோம். சென்ற எட்டு பாடல்களில் பெருமானின் அடியார்கள் பெரும் நன்மையினையும் அவர்களின் தன்மையையும் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் தலத்து மகளிர் இடைவிடாது பெருமானின் பெருமையை பாடுகின்றனர் என்று கூறுகின்றார்.    
  
பொழிப்புரை:

மூன்றடி மண்ணினை தானமாகப் பெற்று இரண்டு அடிகளால் மூவுலகத்தையும் அளந்த ஆற்றல் படைத்த திருமாலும், தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், அவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் தனது திருமேனியின் நீளத்தினை அளந்து அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம், பெருமை மிகுந்த நீண்ட தழலுருவாக நின்றவன் சிவபெருமான். இது போன்று பல பெருமானின் பெருமைகளை மகளிர் இடைவிடாது பாடும் தலம் சாய்க்காடு ஆகும். இந்த தலத்தில் உள்ள பெருமானின் பெருமைகளை உணர்ந்து அவனை தெய்வமாக போற்றாத மனிதர்களின் அறிவினை ஞானம் என்று கருதி நாம் மதிக்கமாட்டோம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com