146. மண் புகார் வான் - பாடல் 10

பெருமானின் அடியார்களாக
146. மண் புகார் வான் - பாடல் 10


பாடல் 10:

    குறம் காட்டு நால்விரலில் கோவணத்துக் கொலோவிப் போய்
    அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும்
    திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடைமின்
    புறம் காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே

 
விளக்கம்:

குறம்=தொடை; கொலோவி=திரிந்து, உலாவி; அறம் காட்டும் சமணர்=தங்களது பொய்யான ஒழுக்கத்தை மறைத்து, சாமார்த்தியமாக பேசி, பல நூல்களை மேற்கோள் காட்டி, தாங்கள் பின்பற்றும் வழி அறத்தின் வழி போன்று காட்டும் சமணர்கள்; திறம்=தன்மை; அலர்=பழிச்சொல்; அந்நாளில் பெருமானின் அடியார்களாக இருந்த பலரையும், தங்களது சாமர்த்தியமான பேச்சினால், பெருமானைப் பழித்துக் கூறும் தங்களது பொய்களால் கவர்ந்து, சமணர்களும் புத்தர்களும் செயல்பட்டமையால், எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு பெருமானை தொடர்ந்து வழிபடவேண்டும் என்று உலகத்தவர்க்கு அறிவுரை கூறும் பாடல்.        

பொழிப்புரை:

தங்களது தொடைகளை வெளியே காட்டும் வகையில் நான்கு விரல் அகலத்தில் உள்ள கோவண ஆடையினை அணிந்தவர்களாக எங்கும் உலாவுபவர்களும், தங்களது பொய்களை  சாமர்த்தியமாக மறைத்து அறவழியில் நடப்பது போன்று பொய்யான தோற்றத்தை உருவாக்கும் சமணர்களும் புத்தர்களும், பெருமானை பழித்துச் சொல்லும் தன்மையை உடைய சொற்களை பொருட்படுத்தாமல், உலகத்தவரே, நீங்கள் தெளிவு உடைய மனத்தராக பூம்புகார் நகரினில் உள்ள சாய்க்காடு தலம் சென்றடைந்து, ஊருக்கு புறம்பாக உள்ள சுடுகாட்டில் நடனம் ஆடும் பெருமானின் திருவடிகளை சென்று சார்வீர்களாக.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com