பாடல் 7:
வேத நாவினர் வெண் பளிங்கின் குழைக் காதர்
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில்
மாதர் வண்டு தன் காதல் வண்டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே
விளக்கம்:
ஓதம்=இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடல்; மாதர் வண்டு=பெண் வண்டு;
பொழிப்புரை:
வேதங்கள் ஓதும் நாவினை உடையவரும், வெண்மையான பளிங்கினால் செய்யப்பட்ட குழை ஆபரணத்தை அணிந்தவரும், இடைவிடாது இரைச்சலிடும் அலைகள் கொண்ட கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கி மகிழ்ந்தவரும் ஆகிய பெருமான் உறைவது சாய்க்காடு திருக்கோயிலாகும். பெண் வண்டு தனது விருப்பத்திற்கு உரிய ஆண் வண்டுடன் விளையாடியும், புன்னை மலர்களின் தாதுகளை உட்கொண்டும், பின்னர் அருகிலுள்ள சோலைகளில் மறைந்து ஊடியும் விளையாடும் பொழில்கள் கொண்டது சாய்க்காடு தலமாகும்.