120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 11

அறியாமையை விளைவிக்கும்
120. பிரமபுரத்துறை பெம்மான் - பாடல் 11


பாடல் 11:

    கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே
    கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே
    கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே
    கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே
கொச்சையன் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே
கொச்சை அண்ணலை கூட கிலார் உள்தல் மூடரே 

முதல் அடி; கொச்சை=அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலம்; கூடகிலார்=ஆணவ மலம் அனைத்து உயிர்களுடன் இணைந்தது என்ற கொள்கைக்கு உடன்படாத சமணர்கள்; மூடாரே என்ற சொல் மூடரே என்று குறுகியது; இரண்டாவது அடி; கொச்சை=புலால் நாற்றம் வீசும் உடல்; அண்ணுதல்=அணுகுதல், இங்கே பொருந்திய என்ற பொருளுடன் வருகின்றது; கூடகிலார்=நிலையற்றது உடல் என்ற கொள்கையுடன் பொருந்தாது வாழும் புத்தர்கள்; மூடரே=துவராடையால் மூடுவார்கள்; மூன்றாவது அடி: கொச்சையன்= அருவருக்கத் தகுந்த மீன்வாடை தனது உடலில் வீசுபவளாக திகழ்ந்த மீனவப்பெண் மச்சகந்தி; மீனவப் பெண்ணாகிய மச்சகந்தியை கண்டு மனம் மயங்கிய அத்தினாபுரத்து அரசன் சந்தனு, அவளது உடலிலிருந்து வீசிய நறுமணத்தால் மனம் கவரப் பட்டான் என்று மகாபாரதம் கூறுகின்றது. அந்த நறுமணம் மீனவப் பெண்ணுக்கு முனிவர் பராசரரால் கிடைத்தது என்பதை இந்த பாடல் உணர்த்துகின்றது; நலை=நலன் கருதி; அகில் ஆர்=அகிற்புகை வாசனையுடன்; கூடு=கூடி பொருந்தும் வண்ணம்; மூடரே=பொருத்திய பராசர முனிவர்; நான்காவது அடி: கொச்சை அண்ணல்=கொச்சை வயம் என்று அழைக்கப்  படும் சீர்காழி தலத்தின் தலைவன்; கூடகிலார்=நேரில் கண்டு வணங்காத மனிதர்கள்; மூடரே=அறியாமை நிறைந்த மனதினை உடையவர்களே. உள்தல் கூடகிலார் என்று சொற்களை மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும்.    
 
பொழிப்புரை:

அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலம் அனைத்து உயிர்களுடன் இணைந்துள்ளது என்ற கொள்கைக்கு உடன்படாத சமணர்கள் தங்களது உடலினை மூடாமல் திரிவார்கள்; நிலையற்ற உடல் என்ற கொள்கையுடன் பொருந்தாத புத்தர்கள், புலால் நாற்றம் வீசும் தங்களது உடலினை துவராடையால் மூடுவார்கள்; மிகுந்த விருப்பத்துடன் தான் புணர்ந்த மீனவப் பெண்ணின் உடலில் வீசிய துர்நாற்றம் மிகுந்த மீன் வாடையை நீக்கி, அவளது உடலில் அகிற்புகையின் நறுமணம் பொருந்தும் வண்ணம் செய்தவர் பராசர முனிவர்; அத்தகைய பராசர முனிவரால் வணங்கப்பட்டவரும் கொச்சைவயம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரத்தில் உறைபவரும் ஆகிய அண்ணல் சிவபெருமானை மனதினில் தியானித்து அவரை நேரே தரிசனம் செய்து வணங்காத மனிதர்கள் எப்போதும் அறியாமையில் மூழ்கி இருப்பார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com