121. அரனை உள்குவீர் - பாடல் 6
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 20th February 2019 12:00 AM | Last Updated : 20th February 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 6:
பாந்தளார்ச் சடைப்
பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள்
வேந்தன் என்பரே
விளக்கம்:
பாந்தள்=பாம்பு; ஏந்து=ஏந்தியவளாக இருக்கும்; பிராட்டியின் மார்பகங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை என்பதை உணர்த்தும் பொருட்டு, பல தலங்களில் பிராட்டியின் திருநாமம் அமைந்துள்ளதை நாம் காணலாம். குன்றமுலை நாயகி (திருநாகேச்சரம்), நன்முலை நாயகி (திருவிடைமருதூர்), ஒப்பிலா முலையம்மை (திருவாவடுதுறை), போகமார்த்த பூண்முலையாள் (திருநள்ளாறு), அழகுமுலை அம்மை (வீழிமிழலை), உண்ணாமுலை அம்மை (திருவண்ணாமலை), இளமுலை நாயகி (திருவோத்தூர்) என்பன சில தலங்களில் வீற்றிருக்கும் அம்மையின் திருநாமங்கள்; வேந்தன்=தலைவன், அரசன்; இங்கே உமை அம்மையின் கணவன் என்ற பொருளில் வந்துள்ளது.
பொழிப்புரை:
பாம்பு பொருந்திய சடை முடியினை உடைய இறைவன் பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் நிலையாக உறைகின்றான். அவன் அழகிய மார்பகங்களை உடைய உமை அம்மையின் கணவன் என்று பலரும் அவனை புகழ்ந்து கூறுவார்கள்.