பாடல் 8:
நறவம் ஆர் பொழில்
புறவ நற்பதி
இறைவன் நாமமே
மறவல் நெஞ்சமே
விளக்கம்:
தினமும் இறைவனின் புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சென்ற பாடலில் நமக்கு அறிவுரை கூறிய சம்பந்தர், அதனை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், இறைவனின் திருநாமத்தை மறவாது நமது நெஞ்சம் இருக்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். நறவம்=தேன்;
பொழிப்புரை:
தேன் நிறைந்த பூக்கள் உடைய பூஞ்சோலைகள் நிறைந்ததும், அடியார்களுக்கு பல நன்மைகளை விளைவிப்பதும், புறவம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி தலத்தில் உறையும் இறைவனின் திருநாமங்களை, உலகத்தவரே, மறவாது உங்களது நெஞ்சத்தில் வைப்பீர்களாக.