121. அரனை உள்குவீர் - பாடல் 10

121. அரனை உள்குவீர் - பாடல் 10

நினைக்க முக்தி


பாடல் 10:

    அயனும் மாலுமாய்
    முயலும் காழியான்
    பெயலவை எய்தி நின்று
    இயலும் உள்ளமே

விளக்கம்:

பெயல்=அருள் மழை; பெயலவை=அருள் பொழிதல்; இயலல்=உள்ளத்தை பொருத்துதல்; இறைவன் பால் உள்ளத்தை பொருத்தி மனம் ஒன்றி அவனை வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வேறு சிந்தனைகளில் மனம் அலை பாயாமல், மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று பல திருமுறை பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. மனம் ஒன்றி இறைவனை வழிபடுவதால் நமக்கு நட்டம் ஏதும் இல்லை என்று உணர்த்தி மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.81.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிர்னைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது.

    ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை
    கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
    சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
    என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே   

பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும், நினைக்க முக்தி என்று திருவண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். என்று வந்தாய் என்று கேட்ட சிவபிரானுக்கு, அப்பர் இந்த பதிகத்தில் விடை அளிக்கவில்லை. அத்தா உன் ஆடல் காண அடியனேன் வந்தவாறே என்று பத்தனாய் பாட மாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பிரான் விடை கூறுகின்றார். இறைவனே இப்பொழுது தான் வந்தேன் என்று உணர்த்தும் வகையில் வந்தவாறே என்று கூறுவதையும். தனது வருகைக்கும் காரணம் உனது ஆடலைக் காண்பது தான் என்று சொல்லும் அழகும் நாம் ரசிக்கத்தக்கது. 

திருஞான சம்பந்தரும் தான் அருளிய முதல் பதிகத்தின் கடைப் பாடலில் (1.1.11). ஒன்றிய உணர்வுடன் இறைவனை குறித்து தான் பதிகம் பாடியதை நமக்கு உணர்த்தி, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு முன்மாதிரியாக இருப்பதை நாம் காணலாம். 

    அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
    பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
    ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
    திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே 

பிரமனும் திருமாலும் தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்த போது, பல முனிவர்கள் அவர்களது வாதத்தை தடுக்கும் நோக்கத்துடன், அவர்கள் இருவரை விடவும் சிவபெருமான் மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லி வாதத்தை தவிர்க்குமாறு வேண்டினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் வாதத்தினை நிறுத்தாமல், சிவபெருமானை விடவும் தாங்கள் பெரியவர்கள் என்று பேசினார்கள். தங்களின் முன்னே நெடிய தழல் பிழம்பாக பெருமான் தோன்றிய போதும், பிழம்பின் அடியையும் முடியையும் தங்களது முயற்சியால் காண்போம் என்று இறுமாப்புடன் பேசினர். இறுதியில் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்து பெருமானின் எல்லையற்ற ஆற்றலை நினைத்து இறைஞ்சிய போது, அவர்கள் அதற்கு முன்னம் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்த பெருமான், இலிங்க வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருளினார். இந்த கருணைச் செயல் இங்கே அருள் மழை என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.     

பொழிப்புரை:

பிரமனும் திருமாலும் தங்களின் முன்னே எழுந்த நெடிய தழல் பிழம்பின் அடியையும் முடியையும் காண முயன்று அந்த முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், சீர்காழி தலத்தில் விளங்கும் ஈசனிடம் இறைஞ்ச பெருமான் அவர்கள் பால் இறக்கம் கொண்டு இலிங்க உருவத்தில் காட்சி கொடுத்த கருணைச் செயலை அடியேனது மனம் நினைத்து, அவரது நினைவில் பொருந்துகின்றது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com