133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 7

உலகத்தவர் உய்வதற்காக
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 7


பாடல் 7:

    பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
    பெற்றி அதுவாகித் திரி தேவர் பெருமானார்
    சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
    நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே
 

விளக்கம்:

பற்றி=பறித்து; பெற்றி=தன்மை; உலகத்தவர் உய்வதற்காக பலி ஏற்கும் பெருமான் இன்றும் தொடர்ந்து பலி ஏற்றுக் கொண்டு இருக்கின்றான். செம்பொன்பள்ளி பதிகத்தின் முதல் பாடலில் (5.36.1)  பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத

    கான் அறாத கடி பொழில் வண்டினம்
    தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்
    ஊன் அறாததோர் வெண் தலையில் பலி
    தான் அறாததோர் கொள்கையன் காண்மினே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று சம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எனவே பலி ஏற்பது அவனது தன்மை என்பதை நாம் உணர்கின்றோம்.

    நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு
    அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல
    இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்
    பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான்.      

    பரந்து உலகேழும் படைத்த பிரானை
    இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்        
    நிரந்தரமாக நினையும் அடியார்
    இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

பொழிப்புரை:

தனது கை நகத்தால் கிள்ளி எறிந்த பிரமனது தலையினைக் கையில் பற்றிக் கொண்டு பல இடங்களிலும் திரிவது, தேவர்களின் தலைவனாக விளங்கும் பெருமானின் இயல்பாகும். இவ்வாறு பலி ஏற்கும் பெருமான் தனது இடுப்பினில் புலித்தோலைச் சுற்றிக்கொண்டும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்டும் தனது நெற்றியினில் ஒரு கண் உடையவராகவும்  இன்றியோர் தலத்தில் நிலையாக உறைகின்றார்.   

பாடல் 8: சிதைந்தது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com