133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 10

பெருமானின் திருவடிகளை
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 10


பாடல் 10:

    நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
    அறிவில் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே
    நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
    மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே

விளக்கம்:

ஆதர்=கீழ்மக்கள்; நெறி=சைவ சமயநெறி; அயர்தல்=மயங்குதல்; இந்த பாடலில் பெருமானின் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாக கருதப்படும் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஏனெனில் பொதுவாக வாழ்த்தொலிகளில் குறிப்படப்படும் அனைத்துப் புகழ் சொற்களுக்கும் முழுதும் பொருந்தும் வண்ணம் விளங்குபவன் பெருமான் ஒருவன் தான். எனவே ஏனையோரை புகழ்ந்து சொல்லப்படும் வாழ்த்துகள், வெறும் உபசார வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை என்று சம்பந்தர் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.

தொன்றுதொட்டு வரும் வைதீக நெறியினைச் சார்ந்த சைவசமயம் ஒன்றே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை உணர்த்தும் சமயம். ஏனைய புறச் சமயங்கள் இடையில் தோன்றியவை; மேலும் அந்த சமயங்கள் முக்தி நெறிக்கு வழிகாட்டுவதில்லை என்பதால் சைவ சமயம் தவிர்த்த மற்ற சமயங்களை புறக்கணிக்குமாறு சம்பந்தர அறிவுரை கூறுகின்றார். நிலையான முக்தி நெறிக்கு வழி வகுப்பதால் சைவசமயத்தை உண்மை நெறி என்றும் முத்திக்கு நிலைக்கு அழைத்துச் செல்லாத மற்ற சமயங்களை நெறியற்றவை என்றும் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.  

இந்த பாடல் நமக்கு சுந்தரர் புகலூர் மீது அருளிய பாடலை (7.34.2) நினைவூட்டுகின்றது. தகுதி அற்றவர்களை புகழ்ந்து பாடுவதால் நமக்கு ஏதும் கிடைக்காது என்பதால், தகுதி உள்ள ஒருவனாகிய பெருமானைப் புகழ்ந்து பாடுங்கள்; நீங்கள் வேண்டுவன பெற்று அமரர் உலகினை ஆளும் தகுதியும் பெறுவது திண்ணம் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

    மிடுக்கு இலாதனை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று
    கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை
    பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
    அடுக்கு மேல் அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே

பொழிப்புரை:

தொன்றுதொட்டு மாறுபாடின்றி வரும் சைவ சமய நெறியை பயில்வதால் நாம் உணர்வதும், நிலையாக என்றும் பெயராமல் இருப்பதும் ஆகிய முழுமுதல் கடவுளாகிய நினையாத அறிவினை உடைய அறிவற்ற கீழ்மக்கள் ஆகிய சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை கேட்டு, மயங்காமலும், தமக்கென்று உண்மையான முக்தி நிலைக்கு வழிகாட்டும் நெறியற்ற புறச் சமயங்களின் அடையாளங்களை நினையாமலும், நின்றியூரில் வாழ்பவனும் மான் கன்றினை தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பேசும் வாழ்த்துரைகளே உண்மையான வாழ்த்து  ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com