134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 7

பெருமானின் திருவடி, திருமேனி
134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 7

பாடல் 7:

    பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்
    தேர் கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
    ஆர நின்ற அடிகள் அவர் போலும்
    கூர நின்ற எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

முந்தைய மூன்று பாடல்களில் பெருமானின் திருவடி, திருமேனி, சடைமுடி ஆகியவற்றின் அழகினை உணர்த்திய சம்பந்தர், இத்தகைய அழகு மிளிர பெருமான் வீதிவலம் வந்த காட்சியை மனதினில் நினைத்தார் போலும். அவ்வாறு வீதிவலம் நடைபெறும் தெருக்களின் அகலத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாரும்=உலகத்தில் உள்ளவர்கள்;

விண்ணும்=விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள்; ஆர=பொருந்த; க்ரூரம் என்ற வடமொழிச் சொல்லை மூலமாகக் கொண்டு எழுந்த சொல்லாக கருதப் படுகின்றது. க்ரூரம்=கொடுமை; தங்களின் விருப்பம் போன்று பல இடங்களுக்கு பறக்கும் கொட்டைகளில் பறந்து சென்று, திடீரென்று கீழே இறங்கி கோட்டைகளின் கீழே அகப்பட்ட அனைத்து உயிர்களையும் கொன்ற செயலின் கொடுமைத் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.  

பொழிப்புரை:

நிலவுலகத்தில் உள்ள மனிதர்களும் விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும் பெருமானைத் தொழுது போற்றும் வண்ணம், தேரோடும் அகன்ற வீதிகளைக் கொண்டதும் எந்நாளும் திருவிழாக்களால் சிறப்பிக்கப்படுவதும் ஆகிய திருப்புன்கூர் தலத்தில் பொருந்தி உறையும்  இறைவனார், கொடுமையான முறையில் அனைவரையும் வருத்திய திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒருங்கே பற்றி  எரியும் வண்ணம் அம்பு எய்தி எரித்தவராவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com