பாடல் 10:
குண்டு முற்றிக் கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கேளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்
கண்டு தொழுமின் கபாலி வேடமே
விளக்கம்:
குண்டு=பருத்த உடல்; முற்றி=மிகுந்து; கீழான தன்மை மிகுந்து; கூறை=உடை, துணி; பிண்டம்= சோற்றுக்கவளம்; பிராந்தர்=மயங்கிய அறிவினை உடையவர்; என்றும் நிலையாக இருக்கும் பெருமானை கருதமால், மற்ற நிலையற்ற பொருட்களை நிலையாக கருதுவதால் சமணர்களை மயக்க அறிவினை உடையவர்கள் என்று அழைத்தார் போலும், பெருமான் மிகவும் குறைந்த ஆடையை உடையவராக இருப்பதால் நக்கர் என்று அழைக்கப் படுவதை நாம் அறிவோம். பெருமான் பலி ஏற்பதையும் நாம் அறிவோம். சமணர்களும் ஆடையேதும் இன்றி பல இடங்களிலும் திரிந்து மற்றவர் தரும் உணவினை ஏற்று வாழ்வதால், நக்கனாக பலியேற்றுத் திரியும் பெருமானுடன் அவர்களை ஒப்பிடுவது தவறு என்பதை உணர்த்தும் வண்ணம், சமணர்கள் மயங்கிய அறிவினை உடையவர்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். கையில் கபாலம் ஏந்தி பலி ஏற்க வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உள்ளத்தில் உள்ள மருள் நீங்கப் பெற்றவராக. பெருமானைத் தொழுது உய்வினை அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
பருத்த உடல் உடையவர்களாய், கீழ்மைத் தன்மை மிகுந்து உடலில் ஆடை ஏதுமின்று பல வீதிகளிலும் திரிந்து பிச்சை ஏற்றுண்பவர்களும், மயக்கம் தரும் அறிவினை உடையவர்களும் ஆகிய சமணர்களின் சொற்களை பொருட்டாக கருதாதீர்கள். மலர்ந்த மலர்களில் உள்ள தேனை உண்பதற்காக கூட்டமாக வரும் வண்டுகளின் இசை நிறைந்த திருப்புன்கூர் தலம் சென்று ஆங்குள்ள இறைவனைக் கண்டு தொழுவீர்களாக. கபாலியாக வேடம் கொண்டு பலியேற்கும் இறைவனைத் தொழுது அவனது பிச்சைப் பாத்திரத்தில் உங்களது மலங்களை இட்டு, மலங்கள் நீங்கியவர்களாக இறைவனின் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.