134. மன்னியூர் இறை - பாடல் 5

இறைவனுக்கும் அடியானுக்கும்
134. மன்னியூர் இறை - பாடல் 5

பாடல் 5:

    நிறைவு வேண்டுவீர்
    அறவன் அன்னியூர்
    மறையுளான் கழற்கு
    உறவு செய்ம்மினே

விளக்கம்:

உறவு=அன்பு; அறவன்=தருமமே உருவானவன்; இறைவனுக்கும் அடியானுக்கும் இடையே உள்ள உறவு, அன்பினால் எழுந்த, இறைவன் பக்தன் என்ற உறவு தான். எனவே தான் இறைவனிடம் அன்பு கொண்டு அவனுக்கு அன்பினனாக நடந்து கொண்டு அவனுடன் உறவாடவேண்டும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இறைவனுக்கு உறவினனாக நடந்து கொள்வதில் என்ன இலாபம் என்று அப்பர் பிரான் அறிவுறுத்தும் பாடலை (5.90.10) நாம் இங்கே காண்போம். விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்டு கடைந்த பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். தகுந்த முறையில் அவனை அறிந்துகொண்டு அவனை வழிபடவேண்டும் என்று இங்கே கூறுகின்றார். நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.   

    விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
    மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
    உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
    முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

பொழிப்புரை:

குறையேதும் இன்றி மனநிறைவுடன் வாழ விரும்பும் அன்பர்களே, நீங்கள் புண்ணியமே வடிவமாக உள்ள அன்னியூர் இறைவனை, வேதங்களில் பரம்பொருளாக கூறப்படுபவனின் திருப்பாதங்கள் பால் அன்பு வைத்து அவனோடு உறவு கொள்வீர்களாக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com