135. மன்னியூர் இறை  - பாடல் 1

உயிர்களை இயக்கம் இறைவன்;
135. மன்னியூர் இறை  - பாடல் 1


முன்னுரை:

தனது ஐந்தாவது தலயாத்திரையில் கண்ணார்கோயில், புள்ளிருக்குவேளூர், திருநின்றியூர், திருநீடூர், திருப்புன்கூர் ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் அருகிலுள்ள பழமண்ணிபடிக்கரை, திருக்குறுக்கை முதலான தலங்கள் சென்று பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த இரண்டு தலங்களின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. குறுக்கைத் தலத்திலிருந்து புறப்பட்ட காழிப் பிள்ளையார் அன்னியூர் மற்றும் பந்தணைநல்லூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. தனது நான்காவது தலயாத்திரையில் திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமமாம்புலியூர், கடம்பூர் வாழ்கொளிபுத்தூர், ஆகிய தலங்கள் சென்றார் என்பதையும், இடறினார் கூற்றை என்று தொடங்கும் பந்தனைநல்லூர் தலத்து பதிகத்தின் (3.121) விளக்கத்தையும் முன்னமே கண்டோம். ஐந்தாவது தலையாத்திரையில் பந்தணைநல்லூர் சென்றபோது சம்பந்தர் அருளிய பதிகமும் இதுவரை கிடைக்கவில்லை.

தற்போது பொன்னூர் என்று அழைக்கப்படும் இந்த தலம் திருநீடூர் தலத்திற்கு மேற்கே உள்ள சாலையில் மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் நகரப் பேருந்து இந்த தலம் வழியாக செல்கின்றது. சிதம்பரம் மயிலாடுதுறை இரயில்பாதையில் நீடூர் நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். இறைவனின் திருநாமம்=ஆபத்சகாயர்; இறைவியின் திருநாமம்; பெரியநாயகி. இந்த தலத்தில் அக்னிதேவன், பாண்டவர்கள், அரிச்சந்திரன், இரதிதேவி, வருணன் ஆகியோர் வழிபட்டு பயன் அடைந்ததாக தலபுராணம் கூறுகின்றது. பங்குனி மாதத்தின் இறுதி ஐந்து நாட்களில் தினமும் காலையில் சூரியன் தனது கதிர்களால் இறைவனை வணங்குவதை இன்றும் காணலாம். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் மற்றும் அபப்ர் பிரான் பாடிய இரண்டு பதிகங்கள் இதுவரை கிடைத்துள்ளன.      
    
பாடல் 1:

    மன்னியூர் இறை
    சென்னியார் பிறை
    அன்னியூர் அமர்
    மன்னு சோதியே

விளக்கம்:

மன்னி ஊர் இறை=என்றும் நிலையாக உயிருடன் ஒட்டி நின்று உயிர்களை இயக்கம் இறைவன்; இந்த விளக்கம் சிவக்கவிமணியாரால் அளிக்கப்பட்டுள்ளது. மன்னு=நிலையாக நிற்கும்; சோதி வடிவமாக உள்ள இறைவனைத் தவிர்த்து மற்ற அனைத்து சோதிகளுக்கும் அதனை இயக்கும் ஒருவன் தேவைப்படுகின்றது. சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சோதிகளும் இறைவன் அவைகளுடன் கலந்திருந்து இயக்குவதால் தான் ஒளி வீசுகின்றன. மற்ற விளக்குகள் எரிவதற்கு வேறு ஒருவரின் உதவியோ தூண்டுதலாவது தேவைப்படும். அத்தகைய உதவியோ தூண்டுதலோ தேவைப்படாமல் தானே சுயமாக ஒளி வீசும் தன்மை உடையவன் பெருமான். சோதி என்பதற்கு ஞானம் என்று பொருள் கொண்டு ஞான வடிவாக இருப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மன்னி ஊர் இறை என்ற தொடரினை பாடலின் கடையில் வைத்து, சோதி வடிவினனாக இருக்கும் இறைவன், பல ஊர்களிலும் எழுந்தருளி ஆங்காங்கே உள்ள மக்களுக்கு தலைவனாக விளங்குகின்றான் என்றும் பொருள் கொள்கின்றனர்.      
  
பொழிப்புரை:

என்றும் நிலையாக உயிருடன் ஒட்டி நின்று இயக்கும் இறைவன், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனாக அன்னியூர் தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளான்; அவன் நிலையாக ஒளி உருவில் விளங்குகின்றான். அவ்வாறு ஒளியுடன் திகழ, அவனுக்கு வேறு எவரது உதவியோ அல்லது தூண்டுதலோ தேவைப்படுவதில்லை.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com