131. அருத்தனை அறவனை - பாடல் 5

புனலாகவும் அனலாகவும் உலகமாவும்
131. அருத்தனை அறவனை - பாடல் 5


பாடல் 5

    மறையவன் உலகவன் மாயமவன்
    பிறையவன் புனலவன் அனலுமவன்
    இறையவன் என உலகம் ஏத்தும் கண்டம்
    கறையவன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

புனலாகவும் அனலாகவும் உலகமாவும் உள்ள பெருமான் என்று மூன்று பஞ்ச பூதங்களை இந்த பாடலில்  குறிப்பிட்டமையால் மற்ற இரண்டு பூதங்களாகவும் இருப்பவன் பெருமான் என்று உணர்த்தியதாக பொருள் கொள்ள வேண்டும்; அதே போன்று சந்திரனையும் அனல் என்று அக்னியையும் குறிப்பிட்டமையால் சூரியனாகவும் இறைவன் உள்ள நிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். மறையவன்=வேதங்கள் உண்மைப் பொருள் என்று உணர்த்தும் பெருமான்; மாயம்=மாயை, உலகப் பொருட்கள் மற்றும் உலகினில் உள்ள அனைத்து உயிர்கள்; மறையவன், உலகவன், மாயமவன் என்பதற்கு வேறு விதமாகவும் அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். மறை என்பது வேதங்கள் முதலான சொற்ப்ரபஞ்சத்தையும் உலகு என்பது பொருட்ப்ரபஞ்சத்தையும், மாயை என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு பிரபஞ்சங்கள் தோன்றுவதற்கு காரணமாக உள்ள சுத்த மாயை மற்றும் அசுத்தமாயையை குறிப்பதாக ;பொருள் கொண்டு, இறைவன் சொல்லாகவும், பொருளாகவும், சொல்லும் பொருளும் தோன்றுவதற்கு காரணமாகிய மாயையாகவும் இருக்கும் நிலையை உணர்த்துவதாக பொருள் கூறுகின்றனர்.  

பொழிப்புரை:

வேதங்கள் உணர்த்தும் உண்மையான மெய்ப்பொருளாகவும், உலகமாகவும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும், உலகினில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருக்கும் பெருமான், சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்களாகவும்,  நீர் தீ முதலான பஞ்ச பூதங்களாகவும் இருக்கின்றான். இவனே அனைவரிலும் முதலானவன், தலையானவன் என்று உலகத்தவர் புகழ்ந்து ஏத்த, வளமான கடைமுடி தலத்தில் உறையும் இறைவன் ஆவான்.,    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com