பாடல் 6:
பட அரவு ஏர் அல்குல் பல் வளைக்கை
மடவரலாளை ஒர் பாகம் வைத்துக்
குடதிசை மதியது சூடு சென்னிக்
கடவுள் தன் வளநகர் கடைமுடியே
விளக்கம்:
குடதிசை=மேற்கு; வளர்பிறை பிறைச் சந்திரன் மேற்கு திசையில் தோன்றுவதால் குடதிசை மதி என்று குறிப்பிட்டதாக அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். சந்திரன் எப்போதும் ஒரே திசையில் தோன்றுவதில்லை. மாதத்தில் பாதி நாட்கள் ஒரு திசையிலும் மிகுதியான நாட்களில் வேறொரு திசையிலும் தோன்றுவதை நாம் காண்கின்றோம். குறைந்த கலைகளைக் கொண்ட சந்திரன் மேற்கே உதிப்பதை பெரும்பாலும் காண்கின்றோம். பட அரவு=புடைத்த படத்தினை உடைய பாம்பு;
பொழிப்புரை:
பாம்பின் புடைத்த படம் போன்று புடைத்து அழகாக விளங்கும் மார்பகங்களைக் கொண்டவளும், பல வகையான வளையல்களைக் கொண்ட கைகளை உடையவளும் இளமையும் அழகும் சேர்ந்து பொருந்தியவளும் ஆகிய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், மேற்கு திசையினில் உதிக்கும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ளவனும் ஆகிய இறைவன் உறைவது வளம் மிகுந்த கடைமுடியாகும்.