பாடல் 7:
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்
அடி புல்கு பைங்கழல் அடிகள் இடம்
கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
கடி புல்கு வளநகர் கடைமுடியே
விளக்கம்:
பொடி=திருநீறு; புல்குதல்=பொருந்துதல்; கடி=நறுமணம்; புரிபுல்கு=முறுக்கேற்றப்பட்ட; பஞ்சினைத் திரித்து நூல் நூற்று முறுக்கேற்றி பூணூல் செய்யப்படுவதை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
திருநீறு பூசப்பட்ட மார்பினில் ஒன்பது புரிகள் கொண்ட பூணூல் பொருந்த இருப்பவனும், தனது திருவடிகளில் வீரக்கழல் பொருந்தியவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, கொடிகளில் பூத்த மலர்களுடன் குளிர்ந்த சுனைகளில் ஊறுகின்ற நீரின் மணமும் கலந்து கமழும் வளமை உடைய கடைமுடி தலமாகும்.