பாட ல் 10:
மண்ணுதல் பறித்தலும் மாயமிவை
எண்ணிய கால் அவை இன்பம் அல்ல
ஒண்ணுதல் உமையை ஒர் பாகம் வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே
விளக்கம்:
மண்ணுதல்=நீக்குதல், கழுவுதல், தலைமுடியினை மழித்தல் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. பறித்தல்=பிடித்து இழுத்தல்; தங்களது தலைமுடிகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொள்ளுதல் சமணர்களின் செயலாகும். அடிக்கடித் தங்களது தலையில் உள்ள முடியினை மழித்துக் கொள்ளுதல் புத்தர்களின் செயலாகும். இந்த இரண்டு செயல்களும் ஒரு மாயத் தோற்றத்தை அவர்களும் இருவரும் ஒழுக்க நெறியுடன் இருப்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், சம்பந்தரது காலத்தில் வாழ்ந்து வந்த சமண மற்றும் புத்தத் துறவிகள், அரசன் தங்களின் மீது வைத்திருந்த மதிப்பினை தவறாக பயன்படுத்தி வந்தமையால், அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இங்கே அறிவுரை கூறுகின்றார்.
பொழிப்புரை:
தங்களது தலைமுடியினை முற்றிலும் மழித்துக் கொண்டுள்ள புத்தர்கள், தங்களது தலை முடியினை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டுள்ள சமணர்கள் ஆகிய இவர்களது புறத் தோற்றத்தை கண்டு. ஒழுக்க நெறியினை உடையவர்கள் என்று அவர்களை நினைத்து, உலகத்தவரே நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களது உண்மையான தோற்றம் மெய்யான துறவல்ல. ஆராய்ந்து பார்த்தால் அவர்களது நெறிகள் உண்மையான அழியாத இன்பத்தை விளைவிக்கும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லாது என்பதை உணரலாம். எனவே அவர்கள் காட்டும் நெறியினைத் தவிர்த்து பெருமான் உணர்த்தும் சைவ நெறியினைச் சார்ந்து உய்வினை அடைவீர்களாக. ஒளிவீசும் நெற்றியினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், தனது நெற்றியினில் கண் உடைய பெருமான், உறையும் தலம் வளம் நிறைந்த கடைமுடி தலமாகும்.