132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 9

பயனாக ஞானம் பெற்று
132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 9

பாடல் 9:

    வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவிய
    சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம்
    ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும்
    போதித்த சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

வேதித்தார்=பேதம் செய்து வேறுபட்டவர்; வேறு எவராலும் அழிக்க முடியாத மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருசேர அழித்து சாதனை செய்தவர் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் சாதித்த வில்லாளி என்று கூறுகின்றார். கண்ணாளன்=கண் போன்று உலகம் இயங்குவதற்கு இன்றியமையாதவனாக விளங்கும் பெருமான்; ஞாலம்=உலகம்; சூரியனின் மகன்களாகிய ஜடாயு சம்பாதி ஆகிய இருவரும், ஒரு முறை மிகவும் உயரே பறந்து சூரிய மண்டலத்தை நெருங்கியதால், அவர்களது சிறகுகள் எரிந்துபட்டு கீழே இந்த தலத்தில் விழுந்தனர் என்றும் பெருமானை வழிபட்டு அதன் பயனாக சிறகுகள் வளர்ந்தன என்றும் தலபுராணம் கூறுகின்றது. உலகத்தவர் பெருமானை வழிபட்டு, அதன் பயனாக ஞானம் பெற்று, மற்றவருக்கு அறிவுரை கூறியது போன்று இந்த இரண்டு பறவைகளும் மற்றவருக்கு அறிவுரை கூறியதாக சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.      .     

பொழிப்புரை:

வேதநெறி வழி செல்லாமல் வேறு வழியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், தான் கொண்டிருந்த கொடிய அம்பினால் ஒரே சமயத்தில் எரித்து அழித்த சாதனை படைத்த வில்லாளி பெருமான் ஆவான். உலகத்தின் கண் போன்று அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதவனாக இருந்து ஆட்கொள்ளும் பெருமான் சார்ந்து தங்குமிடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். அரக்கன் இராவணனை எதிர்கொண்டு, சூரியனின் மகன் என்ற இயல்பினுக்கு ஏற்ப வலிமை கொண்டவன் தான்  என்று உலகுக்கு நிரூபித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் ஆகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com