133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 5

குழலின் இசை
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 5


பாடல் 5:

    குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்
    நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
    அழலின் வலன் அங்கை அது ஏந்தி அனலாடும்
    கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே  

விளக்கம்:

களைகண்=பற்றுக்கோடு; ஒருவர் பாடுவதைக் கேட்கும் அடுத்தவருக்கும் பாடத் தோன்றுவது உலக இயல்பு. அந்த இயல்பினால் குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்கும் குயில்களும் பாடத் தொடங்குகின்றன என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்டு தாமும் பாடத் தொடங்கும் குயில்கள் நிறைந்த சோலைகள், நிழலுடன் எழில் கொஞ்சும் வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய  சோலைகள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில், வலமாகச் சுற்றி எழும் தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்தியவாறும், காலில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்குமாறும் நடமாடும் இறைவன் நம் அனைவருக்கும் பற்றுக்கோடாகத் திகழ்கின்றான்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com